Skip to main content

ஆயிரம் பேருக்கு தலா ஒரு கிலோ வெங்காயம் தானமாக வழங்கிய அசத்தல் விவசாயி!

Published on 20/04/2020 | Edited on 20/04/2020


கரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தனித்திருத்தல் மற்றும் சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் வகையில் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை கடைகளும் காலை 06.00 மணி முதல் 09.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளன. மேலும், சரக்குப் போக்குவரத்துக்கும் கடும் கட்டுப்பாடுகள் இருப்பதால் விளைப் பொருள்களை விவசாயிகளின் நிலத்தில் இருந்து சந்தைக்குக் கொண்டு வருவதிலும் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் பணம் செலவழித்தாலும் விரும்பிய காய்கறிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவது ஒருபுறம் உள்ளதோடு, சரக்குகள் வராததால் சந்தையில் காய்கறிகள் விலையும் தாறுமாறாக உயர்ந்தும் உள்ளன.
 


இந்நிலையில், ஊரடங்கால் சமையலுக்குத் தேவையான பொருள்கள் கிடைக்காமல் தடுமாறும் மக்களின் நிலையைக் கருதி, நாமக்கல் அருகே விவசாயி ஒருவர், சொந்த நிலத்தில் விளைந்த ஆயிரம் கிலோ சின்ன வெங்காயத்தை இலவசமாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவமும் நடந்துள்ளது.
 

 

farmer provide free onion for peoples in namakkal district


நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் செல்லையா. இவருடைய மகன் மதிவர்மன். அப்பா, மகன் இருவருமே விவசாயிகள். இவர்களுக்குச் சொந்தமாகப் பத்து ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளனர். சமையலில் வெங்காயத்தின் பங்கு முக்கியமானது. ஊரடங்கால் வேலையிழந்தும், வருவாயை இழந்தும் தவித்து வரும் மக்களின் நிலையை உணர்ந்த அவர்கள், தங்கள் நிலத்தில் விளைந்த ஆயிரம் கிலோ வெங்காயத்தை மக்களுக்கு இலவசமாகவே வழங்க முடிவு செய்தனர்.

அறுவடை செய்த ஆயிரம் கிலோ சின்ன வெங்காய மூட்டைகளை ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை (ஏப். 20) நாமக்கல்லுக்கு வந்தனர். அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் வாகனத்தை நிறுத்தி வைத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு கிலோ வீதம் சின்ன வெங்காயத்தை வழங்கினர். இலவசமாக வெங்காயம் வழங்கப்படும் தகவல் அறிந்த மக்கள், சிறிது நேரத்தில் அங்கு திரண்டனர். 
 

http://onelink.to/nknapp


முகக்கவசம் அணிந்தும், 3 அடி தூரம் சமூக விலகலுடன் வந்தால் வெங்காயம் வழங்கப்படும் என அவர் கூற, மக்கள் வரிசையில் வந்து வெங்காயத்தை வாங்கிச்சென்றனர். இதுகுறித்து விவசாயி செல்லையா கூறுகையில், ''தற்போது சின்ன வெங்காயம் கிலோ 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. கிராமங்களில் மக்களுக்கு வெங்காயம் எளிதில் கிடைத்து விடுகிறது.

ஆனால், நகர்ப்புற மக்களுக்கு வெங்காயம் கிடைத்தாலும், அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியது உள்ளது. வருமானமே இல்லாத இந்த நேரத்தில் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் நாங்களும் உதவ வேண்டும் என்று எண்ணினோம். அதனால் எங்கள் வயலில் விளைந்த வெங்காயத்தை ஆளுக்கொரு கிலோ வீதம் ஆயிரம் பேருக்கு வழங்கினோம்,'' என்றனர். 

ஒரு மணி நேரத்தில் ஆயிரம் பேருக்கு சின்ன வெங்காயத்தை இலவசமாக வழங்கி முடித்தார், விவசாயி செல்லையா. வெங்காயத்தை உரிக்காமலே மக்கள் கண்களில் நீர் கசிந்ததைப் பார்க்க முடிந்தது!

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.