தர்மபுரி அருகேமர்ம நபர்கள் விவசாயி ஒருவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் புலிகரையைச் சேர்ந்தவர் விவசாயியான கிருஷ்ணன் (55). இவருடைய மனைவி கந்தம்மாள். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிருஷ்ணன் அவரை பிரிந்து புலிகரையில் தனியாக வசித்து வந்தார். இந்தத்தம்பதிக்கு இண்டு மகன்கள் உள்ளனர். கிருஷ்ணனுக்கு சொந்தமாக ஊருக்கு வெளியே விவசாய நிலம் உள்ளது.
இந்நிலையில், டிச. 12ம் தேதி மாலை, கிருஷ்ணன் அவருடைய விவசாய நிலம் அருகே ரத்த வெள்ளத்தில் தலை, முகத்தில் கொடூரமாக வெட்டப்பட்ட காயங்களுடன் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. உள்ளூரைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து மதிகோன்பாளையம் காவல்நிலையத்திற்குத்தகவல் அளித்தனர்.
காவல் ஆய்வாளர் ஷர்மிளா பானு மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். கிருஷ்ணனின் தலை, முகத்தில் கொடூரமாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.உடலைக் கைப்பற்றி போலீசார் உடற்கூராய்வுக்காகதர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயத்தின் ஆழம் மற்றும் சரமாரியான காயங்களின் அடிப்படையில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அவரை சுற்றி வளைத்து வெட்டியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் பெண் உட்பட மூன்று பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.