Skip to main content

விவசாயி மர்ம மரணம்! போலீஸார் தீவிர விசாரணை!  

Published on 15/03/2022 | Edited on 15/03/2022

 

Farmer mysterious death! Police are investigating seriously!

 

நாகை அருகே விவசாயி ஒருவர் அவருக்கு சொந்தமான வயலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அவரது உறவினர்களையும், விவசாயிகளையும் கலங்கடித்துள்ளது.

 

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்துள்ள சின்னத்தும்பூர் ஊராட்சிக்குட்பட்ட ஆலமழை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் லெனின்(42). இவர், தனது வயலில் நெல்சாகுபடி செய்திருந்தார். நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகளை அறுவடை செய்ய இயந்திரத்தை அழைத்து வருவதாக கூறிவிட்டு, வீட்டிலிருந்து நேற்று காலை 10 மணிக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பதற்றமான அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.

 

இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரமே உள்ள அவருக்கு சொந்தமான வயலில், இரண்டு கால்களிலும் சிராய்ப்பு காயங்களுடன் லெனின் இறந்து கிடப்பதாக அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைக்க பதறி துடித்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு லெனின் இறந்துகிடந்தார். அதனைப் பார்த்த அவரது உறவினர்கள் மற்றும் மனைவி ஆகியோர் அழுது புரண்டனர்.

 

சம்பவத்தை கேள்விப்பட்டு அங்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விவசாயி லெனின் உயிரிழந்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

விவசாயி லெனின், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறந்தவருக்கு வேம்பு என்கிற மனைவியும், பிரகதீஸ்வரன், ஜனனி என்கிற இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்