Farmer tried to set himself on fire after asking for bribe; There is excitement in T. Malai

தனது நிலத்திற்கு சிட்டா மற்றும் அடங்கல் கொடுக்க கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதால் விவசாயி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை அடுத்த தேவனாம்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஊதிரம்பூண்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் என்பவர் தனது நிலத்துக்கான சிட்டா மற்றும் அடங்கல் கேட்டு மனு கொடுத்துள்ளார்.

ஊதிரம்பூண்டி கிராமத்தில் விவசாயி ராமகிருஷ்ணனுக்கு நான்கு ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. நான்கு ஏக்கரில் ஆட்டுப் பண்ணை வைத்து விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக தேவனாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் காந்தி என்பவரிடம் சிட்டா மற்றும் அடங்கல் கேட்டு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிராம நிர்வாக அலுவலர் கிடப்பில் போட்டுள்ளார்.

Advertisment

இந்நிலையில் இன்று மீண்டும் விவசாயி ராமகிருஷ்ணன் கிராம நிர்வாக அலுவலர் காந்தியை நேரில் சந்தித்து தனது நிலத்திற்கு சிட்டா மற்றும் அடங்கல் கொடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார். அதெல்லாம் கொடுக்க முடியாது, பணம் தந்தால் தான் வேலை நடக்கும் என சொன்னதோடு ஒருமையில் பேசியதால் மனமுடைந்த விவசாயி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார்.

அவரின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து உடலில் தீப்பற்றி எரிந்ததை கண்டு தீயை அணைத்து உடனடியாக வாழையிலை, வாழை சாறு உள்ளிட்டவற்றை உடல் மீது ஊற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உடனடியாக வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

விவசாயி ராமகிருஷ்ணன் சிட்டா மற்றும் அடங்கல் கேட்டு கிராம நிர்வாக அலுவலர் காந்தி கொடுக்க மறுத்ததால் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சம்பவம் குறித்து கலசப்பாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

லஞ்சம் கேட்டு கிராம நிர்வாக அலுவலர் விவசாய நிலத்திற்கு சிட்டா மற்றும் அடங்கல் கொடுக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.