Skip to main content

தகராறை தட்டிக்கேட்ட விவசாயி கத்தியால் குத்தி கொலை!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

Farmer


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது தாமல் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம். வயது 55. இவரது தம்பி முருகன். முருகனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் ஆகிய இருவருக்குமிடையே சொத்துப் பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
 


இந்த நிலையில் சம்பவத்தன்று 7 மணியளவில் மகேந்திரன் தனது உறவினர்களான ஆமூரைச் சேர்ந்த குமார், அவரது மகன்கள் அருள், திவாகரன் மற்றும் சுபாஷ் ஆகியோருடன் தாமல் கிராமத்திற்குச் சென்று மகேந்திரனுக்கு ஆதரவாக முருகனிடம் தகராறு செய்துள்ளனர். இதனை நேரில் பார்த்த முருகனின் அண்ணன் சுந்தரம் ஏன் இப்படித் தேவையில்லாமல் என் தம்பியிடம் வந்து பிரச்சனை செய்கிறீர்கள், சொத்துப் பிரச்சினை பற்றிப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் அல்லது நீதிமன்றம் மூலம் தீர்த்துக்கொள்ளலாம் அதைவிட்டுவிட்டு அவ்வபோது இப்படிக் கும்பலாக வந்து அடாவடி செய்யலாமா என்று தட்டி கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் தரப்பினர், மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் சுந்தரத்தின் மார்பில் பலமாகக் குத்தி விட்டனர். சுந்தரத்தின் மார்பிலிருந்து ரத்தம் பீரீட்டு வழிய கத்தியால் குத்திய கும்பல் பயந்து ஓடிவிட்டனர். உடன் அக்கம் பக்கம் இருந்தவர்கள் சுந்தரத்தை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
 

 


சுந்தரம் கொலை செய்யப்பட்ட தகவல் திருநாவலூர் போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை சம்பவத்தில் மகேந்திரன் தரப்பைச் சேர்ந்த அருண் என்பவர் சுந்தரத்தை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.

இது சம்பந்தமாக போலீசார் வழக்குப் பதிவு செய்து மகேந்திரன், அவர் தரப்பைச் சேர்ந்த குமார் அவரது மகன்கள் அருண் திவாகரன் மற்றும் சுபாஷ் ஆகியோரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. விஜயகுமார், மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பலத்த போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.