Skip to main content

விவசாயியை அடித்துக் கொலை செய்து சடலத்தை கரும்பு தோட்டத்தில் புதைத்த கும்பல்! 

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

farmer incident in namakkal district police investigation underway

 

ஆத்தூர் அருகே, வாரிசு இல்லாத சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில், விவசாயியை அடித்துக் கொலை செய்து, கரும்பு தோட்டத்தில் புதைத்த கும்பல் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

 

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பு என்கிற சுப்ரமணி (வயது 74), விவசாயி. இவருக்குத் திருமணம் ஆகவில்லை. தனியாக ஒரு வீட்டில் வசித்துவந்தார். 

 

இவர் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி திடீரென்று மாயமானார். நாமகிரிப்பேட்டையில் உள்ள சுப்ரமணியின் உறவினர் கனகம் என்பவர், சுப்ரமணியை கண்டுபிடித்துத் தரக்கோரி, உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டது. 

 

இதையடுத்து, நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பகனூரில் சுப்ரமணிக்கு சொந்தமாக 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தை விற்பனை செய்வதில் ஆத்தூரைச் சேர்ந்த சாராய வியாபாரி பெருமாள் (வயது 55) என்பவருடன் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அவர்தான் கூட்டாளிகளுடன் சேர்ந்து சுப்ரமணியை அடித்துக் கொலை செய்திருக்க வேண்டும் என கனகம் புகாரில் கூறியிருந்தார். 

 

பின்னர் சம்பவ நடந்த இடம் ஆத்தூர் எல்லைக்குள் வருவதால், எஃப்.ஐ.ஆர். மட்டும் பதிவுசெய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கின் தொடர் விசாரணை ஆத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. 

 

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. விவசாயி சுப்ரமணி தன்னுடைய நிலத்தை சாராய வியாபாரி பெருமாள் என்பவருக்கு 1.26 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்திருந்தார். இருதரப்புக்கும் பேரம் படிந்ததை அடுத்து, அந்த நிலத்தைக் கிரயம் செய்வதற்கு முன்பணமாக பெருமாள் 10 லட்சம் ரூபாயைக் சுப்ரமணிக்கு கொடுத்திருக்கிறார். 

farmer incident in namakkal district police investigation underway

 

இந்நிலையில், சுப்ரமணி திருமணமாகாதவர் என்பதும், அவருக்கு நேரடி வாரிசுகள் என்று யாரும் இல்லை என்பதையும் அறிந்த பெருமாள் தரப்பு, அவரை கொலைசெய்துவிட்டு, நிலத்தை அபகரித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது. 

 

இதையடுத்து பெருமாள், அவருடைய ஆதராளர்கள் ராமதாஸ் (வயது 27), அறிவழகன், விவசாயி சக்திவேல், முஸ்தபா, தினேஷ் மற்றும் 19 வயது சிறுவன் ஆகிய 7 பேரும் சுப்ரமணியை கொலைசெய்து, சிவகங்காபுரத்தைச் சேர்ந்த சக்திவேலுக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் புதைத்துவிட்டது தெரியவந்தது. 

 

இதையடுத்து ஆத்தூர் காவல்துறையினர், ராமதாஸ், அறிவழகன் மற்றும் 19 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். ராமதாஸ், அறிவழகன் ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு, சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்குக் காவல்துறையினர் சென்றனர். 

 

அவர்கள் கூறிய இடங்களில் எல்லாம் ஜேசிபி இயந்திர உதவியுடன் தோண்டிப் பார்த்தும் சடலம் கிடைக்கவில்லை. 60 அடி நீளம், 6 அடி ஆழம் வரை பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தோண்டிப் பார்த்தும் சடலம் புதைக்கப்பட்ட இடம் எதுவென்று சரியாகத் தெரியவில்லை. மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை (05.12.2021) அன்றும் சடலத்தைத் தேடும் பணிகள் நடந்தன. இதுவரை சடலமோ, எலும்புகளோ கூட கிடைக்கவில்லை. பிடிபட்ட நபர்கள், சடலத்தைப் புதைத்த இடத்தைத் துல்லியமாகக் கூறாததால் காவல்துறையினரும் சலிப்படைந்தனர். இதையடுத்து கைதான மூவரையும் காவல்துறையினர் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சிறையில் அடைத்தனர். 

 

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெருமாள், சக்திவேல், நரசிங்கபுரம் தினேஷ், ஓலப்பாடியைச் சேர்ந்த முஸ்தபா ஆகியோரைத் தேடிவந்தனர். இந்நிலையில், சனிக்கிழமை (டிச. 4) மாலையில் ஆத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தினேஷும், ஓலப்பாடி முஸ்தபா ஆத்தூர் ஊரக காவல்நிலையத்திலும் சரணடைந்தனர். 

 

இது ஒருபுறம் இருக்க, ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்ட ராமதாஸ், அறிவழகன் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்கள் இருவரையும் 2 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

 

மேலும், தலைமறைவாக உள்ள பெருமாள், தோட்டத்து உரிமையாளர் சக்திவேல் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.