
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி, உச்சிமேடு அடுத்த வெளாங்காட்டு வலசு பகுதியில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (75). இவரது மனைவி பாக்கியம்மாள். விவசாயிகளான இவர்கள் இருவரும் மேகரையான் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவரது மகன் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தோட்டத்தில் தனியாக வசித்து வரும் கணவன், மனைவி இருவரும் கடந்த இரண்டு நாட்களாக மகன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது போனை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று (01.05.2025) இரவு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது கணவன் ராமசாமி வீட்டிற்கு உள்ளேயும், மனைவி பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியேயும் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட எஸ்பி. சுஜாதா சிவகிரி எஸ்.எஸ்.ஐ. அர்ஜுனன், பெருந்துறை டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பிரேதத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன், மனைவி என இருவரும் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சிவகிரி சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.