தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், மேலும் பல்வேறு பகுதிகளில் பலர் கஞ்சாவை ஊடுபயிராக பல இடங்களில் பயிரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று அதியமான் கோட்டை போலீசாருக்கு வத்தல்மலை அடிவாரப் பகுதியில் கஞ்சா செடியைப் பயிரிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று வத்தல்மலை பகுதியில் அதியமான் கோட்டை காவல் ஆய்வாளர் ரங்கசாமி தலைமையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது விவசாயியான நரசிம்மன் என்பவரின் தோட்டத்தில் ஊடுபயிராக கஞ்சா செடிகள் பயிரிட்டு வளர்ப்பது தெரிந்தது.
இதனையடுத்து நரசிம்மனை போலீசார் கைது செய்து பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை அழித்தனர். காவல்துறைக்கு தகவல் தெரிந்து ஒரு சில இடங்களில் மட்டுமே விற்பனை மற்றும் பயிரிடுவது தடுக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் பல்வேறு தளங்களில் விற்பனை நடைபெற்று வருவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இதில் கஞ்சாவுக்கு அதிக அளவில் அடிமையாகி இருப்பது இளைஞர்களே என்பது மிகவும் வேதனையான விஷயம். மேலும் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள பல இடங்களில் இன்றளவும் பலர் ஊடுபயிராக கஞ்சாவைப் பயிரிட்டுள்ளனர். மேலும் காவல்துறை துரித நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விற்பனையும் பயிரிடுவதும் முழுமையாக தடுக்கப்படும் என்பது பொது மக்கள் கருத்தாக உள்ளது.