Skip to main content

அர்ச்சகர் இல்லாத பிரசித்தி பெற்ற ஆலயம்... தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கும் பக்தர்கள்!

Published on 27/09/2021 | Edited on 27/09/2021

 

Famous temple without a priest ... Devotees making demands to the Tamil Nadu government

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது திருவட்டத்துறை கிராமம். வெள்ளாற்றின் கரையில் அழகாக அமைந்துள்ள இந்த ஊரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் ஆலயம் உள்ளது. இங்குள்ள சிவபெருமானுக்கு அரத்துறைநாதர், தீர்த்தபுரீஸ்வரர் என்ற பெயர்கள் உண்டு. இங்குள்ள அம்மன் திரிபுரசுந்தரி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது. இவ்வாலய இறைவனும், அம்பாளும் சுந்தரர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய மூவரால் பாடப்பெற்ற ஆலயம். அப்படி பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்திற்குப் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்துசெல்கிறார்கள். இந்த ஆலய இறைவனைப் பற்றி பாடுவதற்காக இங்கு வந்த திருஞானசம்பந்தருக்கு முத்துச் சிவிகை, முத்துபல்லக்கு, முத்துக்குடை வழங்கி வரவேற்ற அதிசயம் நிறைந்த ஊர்.

 

திருவரத்துறை எனும் திருவட்டத்துறை சீர்காழியைச் சேர்ந்த சிறுவன் திருஞானசம்பந்தர் அங்குள்ள சிவன் ஆலயத்தின் குளக்கரையில் பசியால் அழுதுகொண்டிருந்தபோது பார்வதி தேவியால் ஞானப்பால் கொடுத்து அன்னையின் ஞானம் பெற்ற திருஞானசம்பந்தர், அந்த சிறு வயதிலேயே ஊர் ஊராகச் சென்று சிவாலயங்களில் உள்ள இறைவனையும் அம்பாளையும் பற்றி பாட ஆரம்பித்தார். அப்படி பாடிக்கொண்டு வரும்போது திருவட்டத்துறை இறைவனைப் பற்றியும் பாடுவதற்காக வந்துகொண்டிருந்தார். அந்த காலகட்டத்தில் மக்கள் நடைப்பயணம் மூலம்தான் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்தனர். அதைப்போல சிறுவன் திருஞானசம்பந்தரால் நீண்ட தூரம் நடக்க முடியாதபோது அவரது தந்தை அவரை தோளில் சுமந்து வந்தார். அப்படி திருவட்டத்துறை நோக்கி வரும்போது இறையூர் என்ற ஊர் வந்ததும் இருட்டிவிட்டது. இரவு தங்கிவிட்டு மறுநாள் காலையில் திருவட்டத்துறை சென்று இறைவனைப் பாடுவது என முடிவு செய்து தந்தையும் மகனும் மற்றும் அவர்களுடன் வந்த சிவனடியார்களும் இறையூரில் இரவு பொழுதை கழித்தனர்.

 

அதே இரவு திருவட்டத்துறை ஊரில் உள்ள அரத்துறைநாதர் ஆலய தர்மகர்த்தாக்கள் சிலர் கனவில் தோன்றிய இறைவன், “சீர்காழியிலிருந்து சிறுவன் திருஞானசம்பந்தன், அவனது தந்தை தோளில் சுமந்தபடி வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் என்னைப் பற்றி பாட வந்துகொண்டிருக்கிறான். அவர்கள் தற்போது இறையூரில் தங்கியுள்ளனர். நீங்கள் காலையில் எழுந்தவுடன் ஆலயத்திற்குச் செல்லுங்கள். அங்கே முத்துச்சிவிகை, முத்துப்பல்லக்கு, முத்துக்குடை ஆகியவை தயாராக உள்ளன. அவைகளை எடுத்துச் சென்று உறையூரில் உள்ள திருஞானசம்பந்தரை அதில் அமரவைத்து இங்கு அழைத்துவந்து எம்மைப் பற்றி பாடச் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டு இறைவன் மறைந்தார். காலையில் எழுந்த தர்மகர்த்தா ஒருவர் மற்றொரு தர்மகர்த்தாவிடம் சென்று இரவில் தமது கனவில் தோன்றிய இறைவன் கூறிய விஷயத்தைப் பற்றி சொல்லியுள்ளார். அதைக் கேட்ட அந்த தர்மகர்த்தா, தானும் அதே போன்று கனவு கண்டதாக கூறியுள்ளார். இவர்களைப் போலவே மற்ற அனைத்து தர்மகர்த்தாக்கள் கனவிலும் இறைவன் தோன்றி கூறியுள்ளார் என்பது தெரியவந்தது.

 

Famous temple without a priest ... Devotees making demands to the Tamil Nadu government

 

இதையடுத்து அனைவரும் விரைந்து சென்று கோயில் கதவை திறந்தனர். என்னே அதிசயம், இறைவன் கனவில் கூறியது போலவே முத்துச் சிவிகை, முத்துப்பல்லக்கு, முத்துக்குடை அனைத்தும் தயாராக இருந்தன. தர்மகர்த்தாக்களும் ஊர் மக்களும் இறைவனின் மகிமையைக் கண்டு மெய் சிலிர்த்தனர். தெண்டனிட்டு இறைவனை வணங்கிவிட்டு இறைவன் கூறியபடி முத்துச்சிவிகை, முத்துப்பல்லக்கு, முத்துக்குடை ஆகியவற்றை சுமந்துகொண்டு திருஞானசம்பந்தரை அழைத்துவர இறையூர் நோக்கி புறப்பட்டுச் சென்றனர். அப்படி செல்லும் வழியில் எதிரில் தனது தந்தையுடனும் சிவனடியார்களுடனும் திருஞானசம்பந்தர் எதிரே வந்துகொண்டிருந்தார். இப்படி இருதரப்பினரும் கூடிய இடம் தற்போது கூடலூர் என்ற ஊராக அமைந்துள்ளது. தர்மகர்த்தாக்கள் இறைவன் அளித்த முத்துச்சிவிகை, முத்துப் பல்லக்கில் திருஞானசம்பந்தரை அமரவைத்து முத்துக் குடை பிடித்தபடி திருவட்டத்துறை ஆலயத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வந்த திருஞானசம்பந்தர் இறைவன் தனக்கு அளித்த வெகுமதியை கண்டு மனம் உருகி இறைவனையும், அம்பாளையும் பற்றி பாடினார்.

 

இப்படி திருஞானசம்பந்தருக்கு வெகுமதி அளித்து அதிசயம் நிகழ்த்திக் காட்டிய இறைவன் குடிகொண்டிருக்கும் இந்த ஆலயத்தில் உள்ள இறைவனையும், அம்பாளையும் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்ய தற்போது அர்ச்சகர்கள் இல்லை. ஏற்கனவே இங்கு அர்ச்சகராக பணி செய்துவந்தவர் சாமிநாத குருக்கள். இவர் நீண்டகாலம் இவ்வாலய இறைவனுக்கும், அம்பாளுக்கும் இறை பக்தியுடன் பணி செய்துவந்தார். வயது மூப்பின் காரணமாக ஓராண்டுக்கு முன்பு அவர் இயற்கை எய்தினார். அதன்பிறகு இவ்வாலயத்திற்கு நிரந்தரமான அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை. அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இவ்வாலயத்திற்கு அதன் அதிகாரிகள் நிரந்தரமான அர்ச்சகர் ஒருவரை நியமிக்காமல் அலட்சியமாக உள்ளனர். தினசரி மற்றும் விசேஷ நாட்களில் இறைவனையும் அம்பாளையும் வழிபட வரும் பக்தர்கள் பூஜை செய்ய அபிஷேகம் செய்ய அர்ச்சகர் இல்லாமல் தவிக்கிறார்கள், அல்லாடுகிறார்கள். எனவே நிரந்தரமான ஒரு அர்ச்சகரை பணியமர்த்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பக்தர்களும், ஊர் மக்களும் கடந்த ஓராண்டாக வேண்டுகோள் விடுத்துவருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.