தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் கடந்த 12ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (21.10.2021) பதவியேற்க வந்த பிரபல ரவுடியின் மனைவியைப் பதவியேற்பு விழா கூட்டத்தில் வைத்தே கஞ்சாக் கடத்தல் வழக்கில் போலீசார் கைது செய்த நிலையில், இன்று அவர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் ஊராட்சியில் 9வது வார்டு உறுப்பினராக வெற்றிபெற்றவர் விஜயலக்ஷ்மி. இவர் செங்கல்பட்டில் உள்ள பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவின் மனைவி ஆவார்.
உள்ளாட்சித் தேர்தலில் தன் மனைவியை எதிர்த்து யாரும் நிற்கக் கூடாது, என் மனைவிக்கு ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவி கொடுக்க வேண்டும் எனசிறையிலிருந்தபடியே ரவுடி சூர்யா மிரட்டியதாகக் கூறப்படுகிறது. 50க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சூர்யாவின் மனைவி விஜயலக்ஷ்மி, தேர்தலில் நின்று வெற்றிபெற்றுபதவியேற்க வந்த நிலையில், அவரைபதவியேற்பு விழா மேடையில் வைத்தே போலீசார் கைது செய்தனர். கஞ்சா கடத்தி விற்றுவந்தது தெரியவந்ததால்அவரை கைது செய்ததாக போலீசார் தரப்பு தெரிவித்திருந்தது.
விஜயலக்ஷ்மி கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், நெடுங்குன்றம் ஊராட்சி மன்றத் துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. விஜயலக்ஷ்மியின் வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் தற்போது அவர் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.