சென்னை கொடுங்கையூரில் வீடு ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், திருவள்ளூர் மாவட்டம், அலமாதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, செங்குன்றத்தில் உள்ள கூட்டாளியிடம் நகைகள் இருப்பதாக கூறியதாகவும், அதைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு சென்றும் நகைகளை மீட்க முடியவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில், ராஜசேகரை கொடுங்கையூர் புறக்காவல் நிலையத்தில் வைத்து காலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, திடீரென உடல்நிலை சரியில்லாததால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த மருத்துவமனை அறிவுறுத்தலின் பேரில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில் ராஜசேகர் உயிரிழந்துவிட்டதாக, அவரை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த ராஜசேகர் மீது கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ராஜசேகரின் சந்தேக மரணம் தொடர்பான வழக்கு, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளதோடு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் மாஜிஸ்திரேட் லட்சுமி நேரில் விசாரணை செய்தார். அவரின் முன்னிலையிலேயே ராஜசேகரின் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில் ராஜசேகரின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், ரத்தம் வெளியேறியதற்கான தடயங்கள் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டை முன்வைத்து ராஜசேகரின் உடலை வாங்க மறுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்து விட்டு சென்றுள்ளனர். பிரேதப் பரிசோதனைக்கு முன்னதாக போதிய அவகாசம் கொடுக்கவில்லை, தங்களிடம் கேட்காமலே, கையெழுத்து பெறாமலே பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்று உயிரிழந்த ராஜசேகரின் வீட்டார் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.