Skip to main content

உறுப்புகளை தானம் வழங்க சம்மதித்த குடும்பத்தினர்: சாதனை புரிந்த மருத்துவர்கள்!

Published on 08/07/2021 | Edited on 08/07/2021
Family members who agreed to donate organs: Achieving doctors

 

ஈரோடு அருகே, சாலை விபத்தில் மூளை இறப்பு ஏற்பட்ட அரசுப் போக்குவரத்து ஊழியரிடமிருந்து தானமாக பெறப்பட்ட சிறுநீரகங்கள், கண்கள், தோல் ஆகிய உறுப்புகள் 5 நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள பி.ஆர்.எஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (53). காங்கேயம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றிவந்தார்.  கடந்த 1ஆம் தேதி, மோட்டார் சைக்கிளில் பெருந்துறைக்குச் சென்றுவிட்டு, வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

 

அப்போது எதிரில் தாறுமாறாகவந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், பழனிசாமியின் வாகனத்தின்மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமிக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், ஜூலை 2ஆம் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 4ஆம் தேதி அவர் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். மூளை இறப்பு ஏற்பட்ட பழனிசாமியின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க அவருடைய குடும்பத்தினர் முன்வந்தனர். மனைவி ஜெயமணி, மகள்கள் சவுந்தர்யா, சுகுணா ஆகியோர் கணவர்/தந்தை இழந்த துக்கத்தைத் தாளாத நிலையிலும் பிறரின் துயரத்தைப் போக்க உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க சம்மதித்தனர்.

 

இதையடுத்து ஜூலை 6ஆம் தேதி, பழனிசாமியின் முக்கிய உடல் உறுப்புகள் தானம் வழங்குவதற்கு ஏற்ற வகையில் நல்ல நிலையில் உள்ளதா என 20 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் ஆய்வுசெய்தனர். இக்குழு, பழனிசாமியின் உடலில் இருந்து 2 சிறுநீரகங்கள், 2 கண்கள், தோல் ஆகியவற்றைப் பாதுகாப்பாக அகற்ற முடிவு செய்து, அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். பழனிசாமியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகங்களில் ஒன்று, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் பெண் ஒருவருக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவருக்கும் பொருத்தப்பட்டது. தோல் மற்றும் 2 கண்களும் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டது.

 

சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து சேலம் மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி கூறுகையில், “பழனிசாமியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு சிறுநீரகங்களில் ஒரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளிக்கு உடனடியாக பொருத்தப்பட்டது. மருத்துவர்கள் குழு பரிசோதனையில் பழனிசாமியின் கல்லீரல், இதயம் ஆகிய முக்கிய உறுப்புகள் தானம் கொடுக்கப்படும் நிலையில் இல்லை. அவை பாதிக்கப்பட்டிருந்தன” என்றார். இதற்கிடையே, பழனிசாமியின் உடல் உறுப்புகள் மூலம் 5 நோயாளிகளின் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்பட்டுள்ள தகவலால் அவருடைய மனைவி, மகள்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோடு; தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்த திமுக எம்.பி, என்.ஆர்.இளங்கோ இதற்கான மனுவை அளித்துள்ளார். அதில் 'வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.