Skip to main content

அபகரிக்கப்பட்ட நிலம்... நடவடிக்கை எடுக்காத காவல்துறை... தீக்குளித்த முயன்ற குடும்பம்

Published on 17/05/2021 | Edited on 17/05/2021
Family members who tried to set fire to the police station earlier! After the police promised, they dispersed

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள காரனேஷன் தெருவில் வசித்து வருபவர் 45 வயது நிரம்பிய குமாரி. இவரது கணவர் வேல்முருகன், முன்னாள் திமுக பேரூராட்சி உறுப்பினராக இருந்தவர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வேல்முருகன் இறந்துவிட்டார். அவருக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் 15 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல், போலி ஆவணங்கள் மூலம் விக்கிரவாண்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேறொருவருக்குப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். 

 

இதுகுறித்து அவர்களிடம் குமாரி கேட்டதற்கு, குமாரியின் குடும்பத்தைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர் அந்த நபர்கள். இந்த பிரச்சனை சம்பந்தமாக ஏற்கனவே உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்தாலும், உரிய விசாரணை செய்து மோசடிப் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார் குமாரி. இதனால், நேற்று காலை காவல் நிலையம் வந்து குமாரி மற்றும் அவரது மகன்கள் முரளி, நவீன், கௌதம், மாமியார் விசாலாட்சி உட்பட அவரது குடும்பத்தினர் ஐந்து பேரும் காவலர்களிடம் முறையிட்டுள்ளனர். 

 

அப்போதும் போலீஸார் உரிய விசாரணை செய்து  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்காத காரணத்தால் அவர்கள் 5 பேரும் தங்கள் உடலில் ஏற்கனவே தயாராக வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சி செய்துள்ளனர். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப் பார்த்த அங்கிருந்த பொது மக்கள், அவர்களைத்  தடுத்து நிறுத்தினர். உடனே அனைவர் மீதும் போலீஸார் தண்ணீரை ஊற்றித் தீக்குளிப்பு முயற்சியைத் தடுத்து நிறுத்தினார்கள். 

 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி விஜயகுமார் மற்றும் பிற காவலர்கள், மோசடிப் பேர் வழிகளிடம் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகக் குமாரி குடும்பத்தினரிடம் உறுதியளித்தனர். நில அபகரிப்பு செய்த பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து குடும்பத்தினர் அனைவரும் காவல் நிலையத்திற்கு முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் உளுந்தூர்பேட்டை  நகரப் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மணிப்பூரில் மீண்டும் வன்முறை; 2 பேர் உயிரிழப்பு

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
manipur Churachandpur District sp office incident

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன.

இந்நிலையில் மணிப்பூரில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் சியாம் லால் என்பவர் கடந்த 14 ஆம் தேதி ஆயுதம் தாங்கிய குழுவினருடன் இருப்பது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சியாம் லால் பணியிடை நீக்கம் செய்ததை எதிர்த்து குக்கி சமூகத்தினர் சுராசந்த்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி காவல் நிலையத்தை சூறையாடினர்.

அப்போது கூட்டத்தை கலைக்க முயன்றபோது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. சுராசந்த்பூர் மாவட்டம் முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.