Skip to main content

அபகரிக்கப்பட்ட நிலம்... நடவடிக்கை எடுக்காத காவல்துறை... தீக்குளித்த முயன்ற குடும்பம்

Published on 17/05/2021 | Edited on 17/05/2021
Family members who tried to set fire to the police station earlier! After the police promised, they dispersed

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள காரனேஷன் தெருவில் வசித்து வருபவர் 45 வயது நிரம்பிய குமாரி. இவரது கணவர் வேல்முருகன், முன்னாள் திமுக பேரூராட்சி உறுப்பினராக இருந்தவர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வேல்முருகன் இறந்துவிட்டார். அவருக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் 15 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல், போலி ஆவணங்கள் மூலம் விக்கிரவாண்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேறொருவருக்குப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். 

 

இதுகுறித்து அவர்களிடம் குமாரி கேட்டதற்கு, குமாரியின் குடும்பத்தைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர் அந்த நபர்கள். இந்த பிரச்சனை சம்பந்தமாக ஏற்கனவே உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்தாலும், உரிய விசாரணை செய்து மோசடிப் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார் குமாரி. இதனால், நேற்று காலை காவல் நிலையம் வந்து குமாரி மற்றும் அவரது மகன்கள் முரளி, நவீன், கௌதம், மாமியார் விசாலாட்சி உட்பட அவரது குடும்பத்தினர் ஐந்து பேரும் காவலர்களிடம் முறையிட்டுள்ளனர். 

 

அப்போதும் போலீஸார் உரிய விசாரணை செய்து  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்காத காரணத்தால் அவர்கள் 5 பேரும் தங்கள் உடலில் ஏற்கனவே தயாராக வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சி செய்துள்ளனர். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப் பார்த்த அங்கிருந்த பொது மக்கள், அவர்களைத்  தடுத்து நிறுத்தினர். உடனே அனைவர் மீதும் போலீஸார் தண்ணீரை ஊற்றித் தீக்குளிப்பு முயற்சியைத் தடுத்து நிறுத்தினார்கள். 

 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி விஜயகுமார் மற்றும் பிற காவலர்கள், மோசடிப் பேர் வழிகளிடம் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகக் குமாரி குடும்பத்தினரிடம் உறுதியளித்தனர். நில அபகரிப்பு செய்த பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து குடும்பத்தினர் அனைவரும் காவல் நிலையத்திற்கு முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் உளுந்தூர்பேட்டை  நகரப் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.