Skip to main content

குடும்பச் சண்டையை விலக்கச் சென்றவர் கொலை... 

Published on 16/08/2020 | Edited on 16/08/2020
 ulundurpet

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பள்ளியன் தாங்கல் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் சுரேஷ்குமார். இவருக்கும் காட்டு நெமிலி கிராமத்தைச் சேர்ந்த காத்தவராயன் மகள் கவிதாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இரு குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. 

 

திருமணம் ஆனதிலிருந்து கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு கவிதா காட்டு நெமிலியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கவிதாவின் அண்ணன் முருகவேல் பள்ளியன் தாங்கல் கிராமத்திற்குச் சென்று கவிதாவின் கணவர் சுரேஷ்குமாரிடம் ஏன் இப்படி அடிக்கடி எனது தங்கையை குடும்பம் நடத்தவிடாமல் பிரச்சனை செய்து வருகிறாய் என கேட்டுள்ளார்.

 

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட தகராறை தடுக்க வந்தார் சுரேஷ்குமாரின் தந்தை பழனிவேல். அவரை அசிங்கமாக திட்டி முருகவேல் கோபத்தில் நெட்டி தள்ளினார். இதில் கீழே விழுந்த பழனிவேலின் தலையில் பலத்த காயம் அடைந்துள்ளது. இதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

 

அங்கு இறந்து கிடந்த பழனிவேலு சடலத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து எடைக்கல்  காவல் நிலையத்தில் பழனிவேல் மகன் சுரேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முருகவேலை கண்டி யாங்குப்பம் ரயில்வே கேட் அருகில் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சண்டையை விலக்கச் சென்றவர் கொலையான சம்பவம் அந்த கிராமத்து மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்து; 2 பேர் பலியான சோகம்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
A subsequent incident; Tragedy with 2 peoples

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் சிப்காட் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது லாரியின் வேகத்தை டிரைவர் திடீரென குறைத்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் திண்டுக்கல்லில் இருந்து சென்னையை நோக்கி லாரிக்கு பின்னால் வந்த கார் லாரியின் பின்பக்கம் மோதியுள்ளது. இந்த சூழலில் திருச்சியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து காரின் மீது மோதியது.

இதனால் விபத்தில் சிக்கிய பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்து சுமார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இவர்கள் இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இடைக்கல் போலீசார் இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. லாரி மீது கார் மற்றும் பேருந்து அடுத்தடுத்து மோதிய விபத்தில் தாய் மற்றும் மகன் என 2 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.