Skip to main content

போக்சோ சட்டத்தில் சிக்கிய பயிற்சியாளர்; மாணவிகள் அளித்த போலி புகார்!

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
False complaints by students at Practitioner caught in POCSO Act

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தர்மராஜன். இவர் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதியில் டோக்வாண்டோ பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு தர்மராஜன் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மூன்று மாணவிகள் புகார் அளித்திருந்தனர்.

அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில், தர்மராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, தர்மராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘தன் மீதான மாணவிகள் கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (08-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், புகார் அளித்த மாணவிகளை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினார். 

அப்போது அந்த மாணவிகள், ‘அரவிந்த் மற்றும் பிரதீப் என்பவர்களுக்கு, பயிற்சியாளர் தர்மராஜன் மீதுள்ள தனிப்பட்ட விரோதம் காரணமாக, எங்களை தர்மராஜன் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சொன்னார்கள். அதன்படி, இருவரின் கட்டாயத்தால் நாங்கள் தர்மராஜன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தோம். மற்றபடி தர்மராஜன் எங்களிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை’ என்று வாக்குமூலம் அளித்தனர். 

மாணவிகளின் வாக்குமூலத்தின் படி, தர்மராஜன் மீது போடப்பட்ட போக்சோ வழக்கை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், மாணவிகளை புகாரளிக்கத் தூண்டிய இருவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை அறிக்கை அளிக்க பெரம்பலூர் காவல்துறைக்கு உத்தரவிட்டார். 

சார்ந்த செய்திகள்