Falling Bhavanisagar water level; Farmers in agony

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

Advertisment

கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையில் இருந்து தொடர்ந்து நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவு நீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.69 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,974 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், இதைப்போல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,300 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 3, 200 கன அடி தண்ணீர் பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வருகிறது. காலிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

அதேபோல் மழைப்பொழிவு இல்லாததால் மாவட்டத்தில் மற்ற அணைகளின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39. 88 அடியாக உள்ளது. இதேபோல் 33.47 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.01 அடியாக உள்ளது. தொடர்ந்து மழைப்பொழிவு இல்லாததால் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருவது விவசாயிகள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.