Skip to main content

அரசு அலுவலரின் போலி கையெழுத்து! அதிமுக நகரச் செயலாளர் கைது! 

Published on 04/04/2022 | Edited on 04/04/2022

 

Fake signature of a government official! ADMK city secretary arrested

 

கரூர் மாவட்டம், நங்கவரம் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் கருப்பையா. இவர் கடந்த அதிமுக ஆட்சியில் 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை புஞ்சை புகலூர் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் தனது பணியான கட்டிட உரிமம் வழங்குதல், சொத்து வரி நிர்ணயம் செய்தல், ஆய்வு செய்தல், மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்க களப்பணி ஆய்வு செய்து சட்டத்திற்கு உட்பட்டு இருப்பின் அதனைச் செயல்படுவதற்குச் செயல் அலுவலருக்கு பரிந்துரை செய்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்தார்.


அப்போது புகலூர் நகராட்சி அதிமுக செயலாளராக உள்ள விவேகானந்தன் என்பவர் சுப்பு கார்டன் என்ற பெயரில் உள்ள மனைகளுக்கு, உரிய முறையில் மனைப்பிரிவு அங்கீகாரம் பெறாத மனைகளுக்கு தடையின்மை சான்று கோரி மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு இளநிலை உதவியாளராக பணியாற்றிய கருப்பையா மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு பணியாற்றிய கருப்பையா நங்கவரம் பேரூராட்சிக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.


பணி மாற்றம் செய்யப்பட்ட பிறகு தன்னுடைய கையெழுத்தை போலியாக கையொப்பமிட்டு தடையின்மை சான்றிதழ் பெற்று கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அதிமுக நகரச் செயலாளர் விவேகானந்தன், அவரது மனைவி லலிதா, மாமியார் சரோஜா, ஜாகிர் உசேன், கண்ணன் ஆகிய ஐந்து நபர்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்துள்ளனர். இந்த மோசடியான பத்திரப்பதிவு காரணமாக பேரூராட்சிக்கு ரூபாய் 15 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று திண்டுக்கல் மண்டல பேரூராட்சி உதவி இயக்குநருக்கு கருப்பையா புகாராகத் தெரிவித்துள்ளார்.


மேலும், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தடையின்மை சான்று வழங்கப்படாத சுப்பு கார்டன் இடம் தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் கருப்பையாவிடம் விசாரணை நடத்தினர். இதில், போலியாக கையொப்பமிட்டு தடையில்லா சான்று பெற்றது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அதிமுக நகரச் செயலாளர் விவேகானந்தன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


இதற்கிடையில் விவேகானந்தன் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இரவு 7.30 மணியளவில் கரூர் நகரில் கோவை சாலையில் இருந்த அவரை பசுபதிபாளையம் காவல் போலீசார் கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கரூர் கிளை சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்