Skip to main content

கலெக்டர் பெயரிலேயே ஃபேக் ஐடி... கும்பலை தேடும் போலீஸ்!

Published on 10/06/2022 | Edited on 10/06/2022

 

fb

 

தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க மோசடிகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த 15, 20 வருடங்களுக்கு முன்பு வெளிநாடுகளில் இருக்கும் இளைஞர்களின் குடும்பத்தினருக்கு லேண்ட்லைன் போனில் தொடர்பு கொண்டு உங்களுக்கு பார்சல் அனுப்பி இருக்கிறேன். அந்த பார்சல் கொண்டு வரும் நபரிடம் குறிப்பிட்ட பணத்தை கொடுத்து பார்சலை பெற்றுக் கொள்ளும்படி தங்கள் உறவுகள் பேசுவதுபோல குரலை மாற்றி பேசிவிட்டு, அதே நபர்கள் அடுத்த சில நாட்களில் ஏதாவது ஒரு இடத்தை குறிப்பிட்டு வரச்சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டு செங்கல், காகிதம், தெர்மாகோல் அடங்கிய பார்சலை கொடுத்து விட்டு தப்பிச்சென்று விடுவார்கள். இப்படியே பல ஆயிரம் குடும்பத்தினர் ஏமாந்துள்ளனர்.

 

ஆனால் கடந்த சில வருடங்களாக செல்போன் எண்களை சேகரித்து குலுக்கல் நடத்தியதில் உங்களுக்குக் குலுக்கலில் பல லட்சம் மதிப்புள்ள பரிசு கிடைத்திருக்கிறது, அதனைப்பெற குறிப்பிட்ட தொகையை முன்பணமாக வங்கி கணக்கில் செலுத்தினால் பரிசு பொருள் வீடு தேடி வரும், என்று ஏமாற்றினார்கள். அதேபோல் பேங்க் மேனேஜர் பேசுறேன் உங்க ஏடிஎம் கார்டு லாக் ஆகப்போகுது, கார்டு நம்பர் சொல்லுங்க ஓடிபி வரும் அதையும் சொல்லுங்க லாக் ஓபன் பண்ணித் தரேன் என்று சொல்லி மோசடி செய்து வருகின்றனர்.

 

pudukottai

 

இதேபோல கடந்த சில வருடங்களாக முகநூலில் உள்ள குறிப்பிட்ட சிலரது கணக்குகளில் உள்ள படங்களை எடுத்து புதிய கணக்கு தொடங்கி அவசரமாக பணம் தேவை என மெசேஞ்சரில் தகவல் அனுப்பி பணம் பறிப்பதும் நடந்து வருகிறது. இப்படி எல்லாம் பணம் பறிக்கும் கும்பல் குறித்து புகார் கொடுக்கும் போதெல்லாம் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் தற்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் படத்தைப் பயன்படுத்தி மோசடிக் கும்பல் கிளம்பியிருக்கிறது.

 

fb

 

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தனது முகநூல் பதிவில்... 'என் படத்தைப் பயன்படுத்தி என் அலுவலக ஊழியர்களுக்கு தகவல் அனுப்பி குறிப்பிட்ட நிறுவனத்தின் கூப்பனை வாங்க கூறியுள்ளார். அந்த நபர் பற்றிய முதல் தகவலில் இதைச் செய்தது மகாராஷ்டிரா இளைஞர்கள் என்பது தெரிய வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மோசடி இளைஞர்கள் குறித்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசார் சம்பந்தப்பட்டவர்களைத் தேட தொடங்கியுள்ளனர். இந்த புகாரிலாவது மோசடி இளைஞர்களை கைது செய்தால் நல்லது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

Next Story

பணிமனையிலிருந்து கடத்தப்பட்ட அரசு பேருந்து; அதிர்ச்சியளிக்கும் பின்னணி

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
government bus hijacked from the workshop met with an accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் பணிமனைக்கு வரும் பேருந்துகளில் பழுதுபார்க்க வேண்டிய பேருந்துகளை பணிமனைக்குள்ளும் மற்ற பேருந்துகளை சாலை ஓரத்தில் நீண்ட வரிசையாகவும் நிறுத்திவிட்டு ஓட்டுநர் நடத்துநர்கள் ஓய்வுக்கு செல்வது வழக்கம்.

நேற்று இரவும் இதே போல சாலை ஓரம் 12 பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது. ஊழியர்கள் ஓய்வு அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டனர். இன்று சனிக்கிழமை அதிகாலையில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் அரசு பேருந்து ஒன்று கண்டெய்னர் லாரியில் மோதி விபத்து என்று தகவல் வர போக்குவரத்து கழக அதிகாரிகள் வெளியே சென்று பார்த்த போது அறந்தாங்கியில் இருந்து திருவாடனை செல்லும் TN 55 N 0690 பேருந்தை காணவில்லை. அந்த பேருந்து தான் விபத்திலும் சிக்கியிருந்தது தெரிய வந்தது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்து பார்த்த போது கண்டெய்னர் ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் ஒரு நபர் நான் தான் பஸ் ஓட்டி வந்தேன் என்று சொல்லிக்கொண்டிருக்க அவரைப் பார்த்த பலரும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவரை கண்டுகொள்ளவில்லை.

government bus hijacked from the workshop met with an accident

ஆனால் அந்த நபரோ நான் தான் பஸ் ஓட்டுனேன் லாரியில மோதிடுச்சு. அதுல எனக்கு கால்ல சின்ன காயம் பாருங்க என்று காலில் உள்ள சிறிய ரத்த காயத்தை காட்டியுள்ளார். அதன் பிறகு அந்த நபர் அறந்தாங்கி அழைத்துவரப்பட்டு விசாரிக்கும் போது ஒரே பதில் தான், ‘நான் தான் பஸ் எடுத்துடு போனேன். லாரியில மோதிடுச்சு கால்ல காயம்...’ என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை. அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

போலீசார் தலைசுற்றி நிற்க அந்த நபரின் படத்தைப் பார்த்ததும் நமக்கு கடந்த 13 ந் தேதி அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில் இருந்து ஒரு டாடா ஏஜ் வாகனத்தை எடுத்துக் கொண்டு 15 கி மீ தூரம் சென்றதும் கீரமங்கலம் கடந்து ஆவணத்தில் வைத்து பிடிக்கப்பட்டதும் தெரிந்ததால் 13 ந் தேதி எடுக்கப்பட்ட அந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் படத்தை தேடிப் பார்த்த போது இரண்டும்ஒரே நபர் தான். கடந்த வாரம் டாடா ஏஸ் வாகனம் ஓட்டிய அன்று அணிந்திருந்த அதே சட்டை தான் இன்று பஸ் எடுத்துச் சென்ற போதும் போட்டிருந்தார்.

நன்றாக வாகனம் ஓட்டத் தெரிந்த இந்த நபர் ஏதோ காரணங்களால் மனநலம் பாதிக்கப்பட்டு ஊர் ஊராக சுற்றிதிரிந்தாலும் வாய்ப்புக் கிடைக்கும் போது வாகனங்களை ஓட்டிச் சென்றுவிடுகிறார் என்பது தெளிவாகிறது. நேற்று இரவு இந்த நபர் தான் பணிமனை அருகே சுற்றிவந்தார் என்கிறார்கள் போக்குவரத்துக்கழக ஊழியர்கள். மனநலம் பாதிக்கப்பட்ட இந்த நபரால் இதுவரை 2 சம்பவங்கள் நடந்துள்ளது. இவரை மனநல சிகிச்சை மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல் வெளியில் விட்டால் இன்னும் எத்தனை வாகனங்களை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்துவாரோ? என்று கவலை தெரிவிகின்றனர் அப்பகுதியினர்.