Skip to main content

அரசு முத்திரையுடன் போலி நியமனப் பணி ஆணை... பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட கும்பல்... போலீஸ் விசாரணை!

Published on 02/12/2020 | Edited on 02/12/2020

 

Fake document government job issue police investigation

 

தஞ்சாவூர் மாவட்டம், மருங்குளம், திலகர் தெருவைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மகன் ராஜு. இவர் இன்று 2 -ஆம் தேதி, ஈரோடு மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து, காவல் அதிகாரியிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 

 

"நான் எம்.சி.ஏ முதுகலைப் பட்டம் படித்துள்ளேன். அரசு வேலைக்காக எதிர்பார்த்திருந்தேன். அதற்காக பலரிடமும் ஆலோசனை கேட்டிருந்தேன். இந்த நிலையில், தஞ்சாவூர் ஆரோக்கிய நகரைச் சேர்ந்த ஒரு நபர் எனக்கு அறிமுகமானார். அவர் மூலமாக ஈரோடு பூந்துறை ரோட்டை சேர்ந்த ஒருவர் என்னை வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்குச் சேர்த்து விடுவதாகவும் அதற்கு ரூபாய் 3 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் கூறினார். அவரை நம்பி முதற்கட்டமாக ரூபாய் 50 ஆயிரம் கொடுத்தேன். அப்போது அந்த நபருடன் மேலும் சிலர்  இருந்தனர். 15  நாட்கள் கழித்து அரசுப் பணி நியமன ஆணை வந்துள்ளதாகவும் அதற்கு மீதி தொகையைத் தர வேண்டும் என்றும் அவர் என்னிடம் செல்ஃபோன்  மூலமாகத் தெரிவித்தார். 

 

அதன் பிறகு என்னிடம் இருந்த 30 ஆயிரத்தைக் கொடுத்து அவர்களிடமிருந்து ஒரு பணி நியமன ஆணையைப் பெற்றுக் கொண்டேன். சென்ற ஆண்டு டிசம்பர் மாதம், சான்றிதழ் சரிபார்ப்பதற்காக சென்னைக்கு வரச் சொன்னார்கள். அங்கு மீதமுள்ள ரூபாய் 2 லட்சத்து 20 ஆயிரத்தையும் பெற்றுக்கொண்டு தமிழக அரசின் முத்திரையுடன் கூடிய, பணி நியமன உத்தரவைப் பெற்றுக் கொண்டு என்னை அனுப்பி வைத்தார்கள். அதன் பிறகு ஒரு வருடம் ஆகியும் எந்த ஒரு தகவலும் வரவில்லை. 

 

இது தொடர்பாக ஆய்வு செய்தபோது, இந்தப் பணி உத்தரவு ஆணை போலியானது எனத் தெரியவந்தது. எனவே, என்னை ஏமாற்றிய நபர் மீதும் அவருக்குத் துணையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திருப்பித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
 

இதேபோல, மேலும் 5 பேர் இன்று எஸ்.பி அலுவலகத்தில் வந்து தங்களிடமும் பணங்களைப் பெற்றுக் கொண்டு போலி நியமன ஆணை வழங்கி, மேற்குறிப்பிட்ட அந்த நபர் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றும் சுமார் ரூபாய் 50 லட்சம் வரை அந்தக் கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது என்றும் கூறினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று மனு கொடுத்தனர். அரசு வேலை எனக் கூறி மோசடியில் ஈடுபட்ட அந்தக் கும்பல் யார் எனப் போலீசார் விசாரனையில் இறங்கியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆணவக் கொலை! - பெண்ணின் தந்தை கைது

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
tanjore girl passes away case father arrested by police

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா (19). இவரும், பூவாளூர் பகுதியைச் சேர்ந்த நவீன் (19) என்பவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருப்பூர் மாவட்டம் அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். 

இந்த நிலையில், இவர்களது காதல் ஐஸ்வர்யாவின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. மேலும், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு ஐஸ்வர்யாவின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யாவுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையோடு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மேலும், இவர்கள் இருவரும் திருப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்துள்ளனர். 

இதையடுத்து, இவர்கள் திருமணம் செய்தது ஐஸ்வர்யாவின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இது தொடர்பாக, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆம் தேதி பல்லடம் காவல்துறையினர், ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், கடந்த 3 ஆம் தேதி நவீனை தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள், ‘ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து எரித்துவிட்டனர்’ என்று கூறியுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த நவீன், ஒரத்தநாடு பகுதிக்குச் சென்றுள்ளார். மேலும், அவர் இந்த சம்பவம் குறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், நெய்வவிடுதி மற்றும் பூவாளூர் பகுதிகளுக்குச் சென்று காவல்துறையினர் கடந்த 8ம் தேதி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஐஸ்வர்யா மர்மமான முறையில் இறந்துள்ளதாகத் தெரியவந்தது.

இதையடுத்து, ஐஸ்வர்யா உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு காவல்துறையினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அங்கு உடல் எரிக்கப்பட்ட பின் சாம்பல் கூட இல்லாததை கண்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், அவரது மனைவி ரோஜா, ஐஸ்வர்யாவின் பெரியம்மா பாசமலர், அவரது சகோதரி விளம்பரசி, மற்றொரு சகோதரி இந்து ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில், ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் அவரது மனைவி ரோஜா இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். 

Next Story

மனைவியை வெட்டிவிட்டு தப்பியவர் விபத்தில் பலி 

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
person passes away in accident near tanjore

தஞ்சையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மனைவி உள்ளிட்ட மூன்று பேரை அரிவாளால் வெட்டி விட்டு காரில் தப்பிய கணவன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா நகரை சேர்ந்தவர் நித்தியா. ஐ.ஓ.பி. மண்டல மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சுந்தர் கணேஷ். வங்கி ஒன்றில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனையின் காரணமாக அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இரண்டு மாதமாக வேலைக்கு செல்லாமல் சுந்தர் கணேஷ் வீட்டிலேயே இருந்துள்ளார். 

இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த தனது மனைவி நித்யாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு வெளியே நிறுத்தி வைத்திருந்த தனது காரில் வெட்டிய அரிவாளுடன் தப்பி சென்றார். பிறகு யாகப்பா நகர் பிரதான சாலையில் உள்ள பால் டிப்போவில் இருந்த கடை உரிமையாளர்கள் கோபி மற்றும் தாமரை ஆகிய இருவரையும் வெட்டிவிட்டு காரில் தப்பி சென்றுள்ளார். தப்பிச் செல்லும் போது தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கிப்பட்டி அருகே சாலையை கடக்க முயன்றபோது டிப்பர் லாரி மீது பக்கவாட்டில் மோதியதில் கார் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது காரில் இருந்த அரிவாள் மற்றும் அவரது கை துண்டாக கீழே விழுந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அரிவாள் வெட்டு சம்பந்தமாகவும் விபத்தில் உயிரிழந்தது சம்பந்தமாகவும் தஞ்சை நகர தெற்கு காவல் துறை, தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் மற்றும் செங்கிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் புதிதாக ஒரு வீடு வாங்கியுள்ளனர். ஆனால், கணவரின் விருப்பம் இல்லாமல் இந்த வீட்டை வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் பால் டிப்போவில் இருந்த இருவரை ஏன் தாக்கினார் எனவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.