ADVERTISEMENT

ஃபார்மஸி முடித்துவிட்டு சிகிச்சை; போலி மருத்துவர் மீண்டும் கைது!

12:05 PM Apr 18, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களைக் களையெடுக்கும் நடவடிக்கைகளில் காவல்துறையும், சுகாதாரத்துறையும் முழுவீச்சில் களம் இறங்கியுள்ளன. எம்பிபிஎஸ் படிப்பை முடிக்காமல் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் பிஸியோதெரபி உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் அலோபதி முறையில் சிகிச்சை அளிக்கத் தடை செய்யப்பட்டு உள்ளது.

சில இடங்களில் அனுபவத்தின் அடிப்படையிலும், ஃபார்மஸி படிப்பு முடித்தவர்களும் கூட நோயாளிகளுக்கு ஊசி மருந்து செலுத்தி சிகிச்சை அளித்து வந்துள்ளனர். அவர்களும் போலி மருத்துவர்கள் எனக் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 10க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சேலம் அருகே உள்ள வீராணம் பள்ளிப்பட்டியில் பரமேஸ்வரன் (41) என்பவர் எம்பிபிஎஸ் முடிக்காமல் சொந்தமாக கிளினிக் வைத்து சிகிச்சை அளித்து வருவதாக காவல்துறைக்கு புகார் வந்துள்ளது. அதன்பேரில் எடப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர் தினேஷ்குமார், வீராணம் காவல்நிலைய எஸ்ஐ நடராஜ் மற்றும் காவலர்கள், பரமேஸ்வரனை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் மீதான புகார் உண்மை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர், ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டும் இதே புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது, பிணையில் வெளியே வந்த அவர் மீண்டும் கிளினிக் நடத்தி அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்துள்ளது. இவர், மருந்தாளுநர் (பார்மஸி) படிப்பை மட்டுமே படித்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். கைதான பரமேஸ்வரனை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு மத்திய சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT