விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 Fake doctor arrested near Villupuram

Advertisment

விழுப்புரம் மாவட்டம் க.அலம்பலம் கிராமத்தில் வீரமணி என்பவர் கிளினிக் நடத்தி வந்தார். ஆனால், அவர் டாக்டருக்குப் படிக்காமல் மருத்துவம் பார்த்து வருவதாக, கள்ளக்குறிச்சி சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கள்ளக்குறிச்சி சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பாலச்சந்தர் தலைமையிலான அதிகாரிகள், அந்த கிளீனிக்கிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

பின்னர் வீரமணியிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு, கிளீனிக் வைத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கச்சிராயப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், போலி மருத்துவர் வீரமணியை கைது செய்ததுடன், கிளீனிக்கில் இருந்த ஆங்கில மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.