Skip to main content

போலி சிஐடி போலீஸால் விவசாயிக்கு நேர்ந்த சோகம்

Published on 30/12/2022 | Edited on 30/12/2022

 

Fake CId police who extorted 1.50 lakh from the farmer!

 

தர்மபுரி அருகே, விவசாயியிடம் ரூ.1.50 லட்சம் ரொக்கம், அடையாள ஆவணங்களை வழிப்பறி செய்த போலி போலீஸ்காரரை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள சிக்கலூரைச் சேர்ந்தவர் விவசாயியான கந்தசாமி. இவர் வங்கியில் தனது நகைகளை அடமானம் வைத்து  1.50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். கோட்டப்பட்டி அருகே உள்ள சேக்கேரி - திருவண்ணாமலை சாலை பகுதியில் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் கந்தசாமியை வழிமறித்தார். பின்னர் அந்த வாலிபர், தன்னை ஒரு சிஐடி போலீஸ்காரர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவருடைய வாகனத்தைச் சோதனையிட வேண்டும் கூறியுள்ளார்.

 

சோதனையின் போது ஒரு பாலிதீன் பையில் கந்தசாமி நகைகளை அடமானமாக வைத்து பெறப்பட்ட 1.50 லட்சம் ரூபாய், ஆதார் அட்டை, வங்கி  கணக்கு புத்தகம், 3 கிராமில் ஒரு மோதிரம் ஆகியவற்றை வைத்திருந்தார். இதையடுத்து, அந்த வாலிபர் பணம், ஆவணங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, இவை எல்லாவற்றையும் பக்கத்தில் உள்ள காவல்நிலையத்தில் வந்து பெற்றுக்கொள்ளும்படி கூறிவிட்டு, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் பறந்து சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கந்தசாமி, கோட்டப்பட்டி காவல்நிலையத்திற்குச் சென்றார். அங்கு தன்னிடம் ஒரு சிஐடி போலீஸ்காரர் விசாரணை செய்ததாகவும், அவர் தனது பணத்தையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.     

 

காவல்துறை நடத்திய விசாரணையில், அவர் கூறிய அடையாளத்தில் யாரும் சிஐடி பிரிவில் வேலை செய்யவில்லை என்பதும், அவரை மர்ம நபர் ஒருவர் ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கந்தசாமி அளித்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அரூர் மாம்பட்டியைச் சேர்ந்த தாஸ் செட்டி மகன் அலெக்ஸ் பாண்டியன் (18) என்ற வாலிபர்தான் கந்தசாமியிடம் சிஐடி போலீஸ்காரர் எனக்கூறி நூதன முறையில் ஆவணங்களையும் பணத்தையும் கொள்ளையடித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது  செய்தனர். அந்த வாலிபரிடம் இருந்து ஆவணங்கள், 97,500 ரூபாய் ரொக்கம், மோதிரம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அலெக்ஸ் பாண்டியன் பயன்படுத்தி வந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.