Skip to main content

சேலத்தில் கோஷ்டி மோதல்... ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

Factional clash in Salem; Rowdy massacred
                                                                 வினோத்குமார்

 

சேலத்தில் ரவுடிகளிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில், வாலிபர் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். சேலம் கிச்சிப்பாளையம் காளிகவுண்டர் காடு பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மகன் வினோத்குமார் (26). ரவுடியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த தன் நண்பர்களான மணிகண்டன் (26), பிரதாப் (23),  உதயகுமார் (17) ஆகியோருடன் திங்கள்கிழமை (06.09.2021) இரவு காளிகவுண்டர் காடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு 15 பேர் கொண்ட கும்பல், மோட்டார் சைக்கிளில் வந்திறங்கியது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் சட்டென்று அந்த கும்பல், கத்தி, வீச்சரிவாளால் வினோத்குமார் உள்ளிட்ட 4 பேரையும் சரமாரியாக வெட்டத் தொடங்கினர்.

 

ரத்த வெள்ளத்தில் நான்கு பேரும் சரிந்ததை அடுத்து, அந்தக் கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுவிட்டது. இதில் நான்கு பேருக்கும் தலை, கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நான்கு பேரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவர்களில், வினோத்குமார் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்தக் கொலை, ரவுடிகளிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் நடந்திருப்பது தெரியவந்தது.

 

கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி செல்லத்துரையை கூலிப்படையினர் வெட்டிப் படுகொலை செய்தனர். அவருடைய மாமியார் பேபிக்கு, எதிர் தரப்பைச் சேர்ந்த ரவுடி ஜானின் கூட்டாளிகள் கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜானின் கூட்டாளிகள் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் செல்லத்துரை தரப்புக்கும், ஜான் தரப்புக்கும் இடையே மேலும் பகை மூண்டது. இந்நிலையில்தான் ஜானின் கூட்டாளிகள், செல்லத்துரை தரப்பைச் சேர்ந்த நான்கு பேரை பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டுச் சென்றதும், அதில் வினோத்குமார் பலியானதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, கொலையாளிகளைப் பிடிக்க சேலம் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

 

அதன்பேரில் சங்ககிரி பகுதியில் டி.எஸ்.பி. நல்லசிவம் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சங்ககிரி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த 6 பேரை மடக்கிப்பிடித்தனர். அவர்கள்தான் கிச்சிப்பாளையம் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்வர்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் கிடைக்கப்பெற்ற கிச்சிப்பாளையம் காவல் நிலைய காவல்துறையினர், சங்ககிரி விரைந்து சென்று, பிடிபட்ட கும்பலை சேலத்திற்குக் கொண்டு வந்தனர். விசாரணையில், அவர்கள் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த சதாம் உசேன் (24), பேரன் என்கிற விஜி (22), கமல் (20), சஞ்சய் (20), நந்தகுமார் (22), மாதவன் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

 

இது ஒருபுறம் இருக்க, இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பழனிசாமி உள்பட நான்கு பேரை காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். இவர்கள் பத்து பேரிடமும் தீவிர விசாரணை நடந்துவருகிறது. ரவுடிகளுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலால் அடுத்தடுத்து மேலும் சில கொலைகள் விழும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் கிச்சிப்பாளையம் பொதுமக்கள் பதற்றத்தில் உள்ளதோடு, ரவுடிகளின் கொட்டத்தைக் காவல்துறையினர் அடியோடு ஒடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.