முகநூல் பயன்படுத்தி வரும் பெரும்பாலானோர் தன் சுய தம்பட்டம் அடிப்பதையே வேலையா வைத்திருக்கிறார்கள். சிலரோ பொதுமக்களின் வாழ்வியல்களுக்காகவும், அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கான சமூக சேவைக்காக பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் திருச்சியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் தன் பள்ளி மாணவர்களுக்காக முகநூல் மூலம் நிதி திரட்டி புதிய கலர் டிரஸ் வாங்கி கொடுத்தது மாணவர்கள் இடையே பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவது பொது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisment

facebook used trichy 407 govt school students get it new dress provide teacher

துவக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றார்கள். தினந்தோறும் பள்ளி சீருடை அணிந்து வரும் மாணவர்களுக்கு, தற்போது புதன்கிழமை தோறும் வண்ண உடை வழங்கி அசத்தி உள்ளார்கள். முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆரஞ்சு நிறமும், இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மஞ்சளும், மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு சிவப்பு நிறமும், நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு பச்சை நிறமும், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிங்க் நிற ஆடையும், வழங்க முடிவு செய்து தற்போது மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு சிவப்பு நிற பனியனும் கருப்பு நிற பேண்ட்டும் வழங்கியுள்ளார்கள். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். பிரதி வாரம் புதன்கிழமை தோறும் வண்ண உடையில் மாணவர்கள் வருவது மாணவர்கள் மனதளவில் உத்வேகத்தையும் புத்துணர்ச்சியும் அளித்துள்ளது.

திருச்சி மணிகண்ட வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் தலைமையில், யுகா அமைப்பு அல்லிராணி பாலாஜி, தலைமை ஆசிரியர் ஜெயந்தி, உதவி ஆசிரியர் புஷ்பலதா, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வண்ண சீருடை வழங்கினார்கள். இதற்கு உதவி ஆசிரியர் புஷ்பலதா முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஒரு லட்சத்து 50 ஆயிரம் நிதி திரட்டி 407 பள்ளி மாணவர்களுக்கு புதன்கிழமைக்கு வண்ண சீருடை வழங்கி இருப்பது பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.