Skip to main content

65 பள்ளிக் குழந்தைகளுக்கு கண் பாதிப்பு- ஏர்வாடி பள்ளி விழாவில் பதட்டம்

Published on 17/03/2018 | Edited on 17/03/2018
students

 

நெல்லை மாவட்டத்தில் ஏர்வாடி நகரில் உள்ளது எஸ்.வி.ஹிந்து ஆரம்பப் பள்ளி அரசு நிதி மற்றும் உதவிகள் பெறும் இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை  உள்ளதில் சுமார் 100 குழந்தைகள் பயில்கின்றனர் தனியார் பள்ளியான இந்தப் பள்ளியின் தாளாளர் பாலசுப்பிரமணியன் நிர்வாகத்தில் உள்ளது.

 

இந்நிலையில் இந்தப் பள்ளியின் ஆண்டு விழா நேற்று (மார்ச்16) ஏற்பாடு செய்யப்பட்டு பள்ளியின் இரு வகுப்பறைகளை ஒன்றாக்கி ஆண்டு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தனியார் மைக்செட் உரிமையாளரான ரமேஷ்  என்பவர் மைக் மற்றும் லைட் செட் அமைத்தவர் வகுப்பறைக்குள்ளேயே ஹை வோல்ட்டேஜில் வெள்ளை நிறம் கொண்ட ஹைமாஸ்ஃபோகஸ் லைட்டை வகுப்பறையில் அமைத்தவர் அதை சிறுவயது மாணவ மாணவியரை நோக்கி அமைத்து விட்டார்.

 

மதியம் இரண்டரை மணி வாக்கில் ஆண்டுவிழா தொடங்கியதும் ஹைமாஸ்ஃபோகஸ் லைடடின் அதிக சக்தி வெளிச்சம் மாணவக் குழந்தைகளை நோக்கிப் பாய்ந்த சிறிது நேரத்தில்; அவர்களுக்குக் கண்ணில் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. கண்களைக் கசக்கியவாறு அந்தக் குழந்தைகள் அழுவதைக் கண்ட ஆசிரியர்கள் ஃபோகஸ் லைட்டை ஆஃப் செய்து விட்டு விழாவை நிறுத்தி விட்டு பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.

 

இன்று காலை அந்தப் பள்ளிப் பிள்ளைகளுக்கு கண் சிவந்து கண்ணிலிருந்து நீர் வடிவதைக் கண்டு பதறிய பெற்றோர்கள் பள்ளி தாளாளரிடம் தெரிவிக்க அவரோ பிள்ளைகளை நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து வந்திருக்கிறார். இந்தப் பாதிப்பு ஏற்பட்ட சுமார் 65 பிள்ளைகள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு இங்கு சோதனை செய்யப்பட்டதில் வெளிச்ச கூச்சத்தினால் ஏற்பட்ட எரிச்சல். பாதிப்பு இல்லை என்ற மருத்துவர்கள் அவர்களுக்கு கண் சொட்டு மருந்து போட்டு இரண்டே நாளில் சரியாகிவிடும் என்று தெரிவித்து அனுப்பிவைத்தனர். மருந்து போடா விட்டாலும்  கூட இந்த எரிச்சல் இரண்டு நாளில் சரியாகிவிடும் என்று டாக்டர்கள்; தெரிவிப்பதாக தெரிவித்த காவல்துறையினர் மைக்செட் உரிமையாளர் ரமேஷ் தப்பி ஒடிவிட்டார் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைத் தேடி வருகிறோம் என்கிறாhகள். 

 

குழந்தைகளுக்கு கண்பாதிப்பு இல்லை சக்தி வாய்ந்த விளக்கு பயன்படுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பு புறநோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின்பு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்கிறார் மாவட்டக் கலெக்டரான சந்தீப் நந்தூரி.

- ராம்குமார்

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோன்கள் கண்காணிப்பில் வெள்ளியங்கிரி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Drones are the key to surveillance

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் காட்டுத்தீ ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகியுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கான பாதையைத் தவிர்த்து வேறு பாதையைப் பயன்படுத்திவிடாமல் இருக்க கண்காணிக்கப்படுவதாற்காக ட்ரோன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக மலையேற தொடங்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் தற்போது ட்ரோன்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.