Skip to main content

ராஜேஷ் லக்கானிக்கு கூடுதல் பொறுப்பு! அரசியலுக்குள் நுழைகிறாரா சகாயம்?

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

sagayam

 

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் வி.ஆர்.எஸ். கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டதால், அரசுப் பணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். சகாயம் ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்தவர். திறமையான அதிகாரிகளை முக்கியத்துவமில்லாத துறைகளில் நியமித்து அவர்களை முடக்கிவைப்பது அதிமுக அரசின் எழுதப்படாத விதி. அதில் சிக்கிக்கொண்டவர் சகாயம். 

 

ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளால் மன உளைச்சலில் இருந்த சகாயம், அரசுப் பணியிலிருந்து விருப்பு ஓய்வு பெறுவதாக மூன்று மாதங்களுக்கு முன்பு, முதல்வர் எடப்பாடி அரசிடம் கடிதம் கொடுத்திருந்தார். அவர் கடிதம் கொடுத்ததை அடுத்து, ஏன் இந்த முடிவு? என்று ஒருநாள் கூட அவரிடம் தலைமைச் செயலாளர் சண்முகம் விசாரிக்கவில்லை.

 

tn

 

இந்நிலையில், அவரது விருப்ப ஓய்வு கோரிக்கையை எடப்பாடி அரசு ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துவிட்டது. இதனைத் தொடர்ந்து அரசுப் பணியிலிருந்து விலகிக் கொண்டார் சகாயம். மூன்று வருடம் சர்வீஸ் இருக்கும் நிலையில், அவர் விலகியுள்ளார். 'லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்' என்கிற முழக்கத்துடன் கடந்த பல வருடங்களாக இயங்கிவந்த சகாயம், சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அரசியலுக்குள் இழுக்க அவரைப் பலரும் அணுகியுள்ளனர். இதனால், அரசியலுக்கு வருவாரா? அல்லது ஐ.ஏ.எஸ். அதிகாரியான சந்தோஷ்பாபு வழியில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைவாரா? என்கிற கேள்விகள் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன

 

இதுகுறித்து கருத்தறிய அவரை நாம் தொடர்புகொண்டபோது, அவரது எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. சகாயம் கவனித்துவந்த அறிவியல் நகரத்தின் துணைத்தலைவர் பதவியை ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ்.சிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைத்துள்ளது எடப்பாடி அரசு.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Tamil Nadu Govt order Transfer of 8 IAS officers

சமீப காலமாகப் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அண்மையில் தமிழ்நாடு முழுவதும் 6 மாவட்ட ஆட்சியர் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக ஏ. சுகந்தி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் உள்துறை இணைச் செயலாளராக எஸ்.பி. அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வணிகவரித்துறை இணை ஆணையராக (நிர்வாகம்) பி. ரத்தினசாமி ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று இணை மேலாண் இயக்குநராக ஆனந்த் மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நிஷாந்த் கிருஷ்ணா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி ஆணையராக வி. சரவணன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சி கூடுதல் ஆணையராக (சுகாதாரம்) வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட அதிகாரியாக வீர்பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
IAS officers job transfer!

தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள்  பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், ‘திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த முருகேஷ் வேளாண்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிச்சந்திரன் உயர்க்கல்வித்துறை துணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். விவசாய சந்தைப்படுத்தல் மற்றும் விவசாய வணிக இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த நடராஜன் ஐஏஎஸ், வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய் நிர்வாக முதன்மைச் செயலராக இருந்த பிரகாஷ் ஐஏஎஸ், வேளாண் வணிகத்துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த குமரவேல் பாண்டியன், தோட்டக்கலைத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சேலம் மாவட்ட ஆட்சியராக பிருந்தா தேவியை பணியிட மாற்றம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக கற்பகராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக கமல்கிஷோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.