அண்மையில் விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிகழ்ந்த பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்துகளில் பலர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் விருதுநகரில் விதிகளை மீறிச் செயல்பட்ட 35 பட்டாசு ஆலைகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் இந்தியாவிற்கான 90% பட்டாசு தயாரிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு உற்பத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்றது. கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சில இடங்களில் ஏற்பட்ட வெடி விபத்துகளில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் விருதுநகர் மற்றும் சிவகாசி பகுதிகளில் விதிகளை மீறி இயங்கும் பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் கடைகளைக் கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை ஆகிய துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் கொண்ட 12 கண்காணிப்புக் குழுக்களை அமைத்திருந்தது.
இக்குழு பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டது. கடந்த ஒரு வாரமாக இந்த ஆய்வு தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், விதிகளை மீறிச் செயல்பட்டதாக இதுவரை 35 பட்டாசு தொழிற்சாலைகளுக்கும், 25 கடைகளுக்கும், 5 பட்டாசு குடோன்களுக்கும் சீல் வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.