நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கும்,புதுப்பிக்காதவர்களுக்கும், நிவாரணம் வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை எனசென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது..
ஊரடங்கின் காரணமாக,நலவாரியத்தில் பதிவு பெறாதவர்களுக்கும்,உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கதவறியவர்களுக்கும், நிவாரணம் வழங்க வேண்டும் என்று கட்டுமானத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் ஆஜராகி வாதிட்டார். அரசு உத்தரவை சுட்டிக்காட்டி வாதிட்ட அவர்,கட்டுமான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள், மிகவும் வறுமையில் உள்ளனர்.குறைந்தபட்ச நிவாரணமாக ஆயிரம் ரூபாய் மற்றும் ரேஷன் பொருட்கள்,அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.மனிதநேய அடிப்படையில் அவர்களுக்கு உதவி செய்யப்பட வேண்டும்,அதற்கு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுகொண்டார்.
அப்போது,அரசுதரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத், நேரடியாக வராமல் மறைமுகமாக இதுபோல் அவர்கள் கேட்கின்றனர். மேலும்,நலவாரியத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டே வழங்கப்படுகிறது.நலவாரியத்தில் புதுப்பிக்கதவறியவர்கள் மற்றும் உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கு, நிவாரணம் வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை என்று அவர் தெரிவித்தார்.
இதையடுத்து,விரிவான வாதத்திற்காக,வழக்கு விசாரணையை வருகிற திங்கட் கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இதேபோல்,கோவில்கள் மூடப்பட்டுள்ளதாலும், திருமண நிகழ்வுகள் நடைபெறாத காரணத்தினாலும்,நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற வழக்கும், திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.