Skip to main content

பட்டாசு ஆலை விபத்து; மாவட்ட ஆட்சியர் விளக்கம்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Explanation of the District Collector for Fireworks factory accident at viruthunagar

விருதுநகர் அருகே உள்ள முத்துசாமி புரத்தில் விஜய் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த நிலையில், இன்று (17-02-24) வழக்கம் போல பட்டாசு ஆலையில் வேலைகள் நடந்து வந்த நிலையில், மதியம் 12 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் கிட்டத்தட்ட 30 பேர் அங்கு பணியாற்றியதாகக் கூறப்பட்டது.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 7 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசுக்கு மருந்து கலக்கும்போது ஏற்பட்ட உராய்வின் மூலம் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் என்றும், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், வெடி விபத்து தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விபத்து குறித்து ஆய்வு நடத்திய பின் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பேசுகையில், “விதிகளை மீறி அதிகளவு ரசாயன மூலப் பொருட்களைச் சேமித்து வைத்ததே விபத்துக்கான காரணம் எனத் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும். மாவட்டம் முழுவதும் பட்டாசு ஆலை விதி மீறலைத் தடுக்க 4 குழுக்கள் கண்காணித்து வருகிறது” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து; 10 லட்ச ரூபாய் பொருட்கள் சேதம்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
fire breaks out in furniture shop at midnight in Erode

ஈரோடு பெரியவலசு, கொங்கு நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் அதே பகுதியில் கடந்த பல வருடங்களாக வீடு மற்றும் கடைகளுக்கு தேவையான பர்னிச்சர் பொருள்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இவரது கடையில் சுமார் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடையில் மரச் சாமான்கள் அதிக அளவில் இருந்தன.

இந்த நிலையில் பொன்னுச்சாமி நேற்று இரவு வேலையை முடித்து விட்டு வழக்கம் போல் கடையை பூட்டிச் சென்று உள்ளார்.  நள்ளிரவு 2 மணி அளவில்  இவரது கடையில் இருந்து தீ பரவி வருவதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் . சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர்  தீயை அணைக்க போராடினர். மர சாமான்கள் மற்றும் எந்திரங்கள் அதிக அளவில் இருந்ததால் தீ கொளுந்து விட்டு எரிந்தது.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில்  கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மரப் பொருள்கள் மற்றும் மெஷின்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நல்ல வேலையாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து பர்னிச்சர் கடையை சுற்றி ஏராளமான குடியிருப்புகளும் இருந்தன.