Skip to main content

விலை எகிறிய முருங்கை காய்...!  கிலோ ரூ. 300க்கு விற்பனை! 

Published on 14/12/2021 | Edited on 14/12/2021

 

Expensive drumstick ...! Rs. Sale for 300!

 

தமிழகம் முழுக்க வடகிழக்கு பருவமழை பல்வேறு இடங்களில் அதன் இயல்பைவிட கூடுதலாக பெய்தது. அதே போல் ஈரோடு மாவட்டத்திலும் சென்ற சில நாட்களாக பருவமழை பரவலாக பெய்தது. இதன் எதிரொலியாக ஈரோடு மார்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து என்பது வெகுவாக குறைந்தது. இதனால் பல வகை காய்கறிகளின் விலையும் வேகமாக உயர்ந்தது. ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் செயல்பட்டுவரும் பெரிய மார்க்கெட்டில் மழை காரணமாக பல்வேறு காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு விற்பனைக்கு வருவது  குறைந்தது. மேலும் இப்போது கார்த்திகை மாதம் என்பதால் பலரும் விரதம் இருந்து வருகின்றனர். இதனால் அசைவத்திற்கு பதிலாக சைவ உணவு உட்கொள்வோர் அதிகரித்துள்ளனர்.

 

எனவே காய்கறிகளின் தேவை என்பது அதிகரித்துள்ளது. எனினும் தேவைக்கேற்ப வரத்து இல்லாததால் அதன் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக சில நாட்களாக முருங்கைக்காய் விலை தொடர் வேகத்தில் எகிறியிருக்கிறது. இந்த மார்கெட்டுக்கு தினமும் 100 மூட்டை முருங்கைக்காய் வழக்கமாக வரும். ஆனால் தற்போது வெறும்  10 மூட்டைகள் மட்டுமே வருகிறது. இதனால் முருங்கைக்காய் விலை கிலோவுக்கு அதிரடியாக உயர்ந்து 14ந் தேதியன்று ஒரு கிலோ ரூபாய் 300-க்கு  விற்பனை செய்யப்பட்டது. 

 

தொடர்ந்து முருங்கைக்காய் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இதே போல் மற்ற காய்கறிகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகளின் 14 ந் தேதி விலை ஒரு கிலோ அளவுப்படி, கத்திரிக்காய் ரூபாய் 120, கருப்பு அவரை ரூ. 120, பட்டா அவரை 100 ரூபாய், பீட்ரூட் 60, ரூபாய், கேரட் ரூபாய் 70, பீன்ஸ் ரூ 80, பச்சை மிளகாய் ரூ. 70, முட்டைக்கோஸ் ரூபாய் ரூ. 60, இஞ்சி ரூ. 50, உருளைக்கிழங்கு ரூ. 40, முள்ளங்கி ரூ. 50, பீர்க்கங்காய் ரூ. 70, பாவைக்காய் ரூ. 60, சின்ன வெங்காயம் ரூ. 50 முதல் 60 வரை பெரிய வெங்காயம் ரூ. 40லிருந்து ரூ. 50 என விற்கப்படுகிறது. உணவுப் பொருட்களின் விலையேற்றம் கூலி வேலை மற்றும்  நடுத்தர வர்க்க குடும்பத்தினரை மிகவும் பொருளாதார ரீதியாக பாதித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.