தஞ்சையைச் சேர்ந்த ரவுடிக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் திப்பிராஜபுரம் அருகே உள்ள சென்னியம்மங்லத்தை சேர்ந்தவர் கட்ட ராஜா (41). அந்த பகுதியில் ரவுடியாக வலம்வந்த கட்ட ராஜா சென்னியம்மங்கலத்தை சேர்ந்த செந்தில்நாதன் என்பவரை கொலை செய்த வழக்கில் பட்டீஸ்வரம் காவல்நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த கொலை மீதான விசாரணை கும்பகோணம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பெஞ்சமின் ஜோசப் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கட்ட ராஜாவுக்கு தூக்குத்தண்டனை விதித்து நீதிபதி பெஞ்சமின் ஜோசப் தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த வழக்கில் ரவுடி கட்ட ராஜாவின் கூட்டாளிகள் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.