Skip to main content

ஆன்லைனை தவிர்த்து நேரடி டெண்டரில் எடப்பாடி!! நேரடி டெண்டர் அதிர்ச்சியளிக்கிறது- ஸ்டாலின் அறிக்கை

Published on 14/09/2018 | Edited on 14/09/2018

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஆன்லைன் டெண்டருக்குப் பதில்”, தன் சொந்த மாவட்டமான சேலம் உள்ளிட்ட பல்வேறு நெடுஞ்சாலைத்துறையின் “கட்டுமானம் மற்றும் பராமரிப்பு” வட்டார அலுவலகங்களில், டெண்டர்களை நேரடியாகவே பெற்றுக்கொள்ளும் மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி அவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். “நெடுஞ்சாலைத்துறையில் இணையவழி டெண்டர் இருப்பதால் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை” என்ற முதலமைச்சர் இப்போது, “ஆன்லைனை” தவிர்த்து விட்டு, டெண்டர்களை நேரடியாகப் பெறுவது அதிர்ச்சியளிக்கிறது.

 

stalin

 

தமிழக நெடுஞ்சாலைகள் துறையில் உள்ள சென்னை “பராமரிப்பு மற்றும் கட்டுமான” வட்டார அலுவலகத்தில் 70 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள 03.09.2018 ஆம் தேதியிட்ட டெண்டரும், இதே வட்டார அலுவலகத்தில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான 21.08.2018 ஆம் தேதியிட்ட டெண்டரும், சேலம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை வட்டார அலுவலகத்தில் 140 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள 20.08.2018-ஆம் தேதியிட்ட டெண்டரும் “ஆன்லைனில் பெறப்படாமல்”, நேரடியாக டெண்டர் படிவங்கள் கொடுக்கப்பட்டு, அவை பூர்த்தி செய்யப்பட்ட பிறகு நேரடியாகவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் பெறப்படுகிறது.

 

ஊழலின் ஊற்றுக்கண் முதலமைச்சரின் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை அலுவலகத்திலிருந்தே துவங்கி,  தமிழகம் முழுவதும் பரவி, துர்நாற்றம் வீசும் விதத்தில் பாய்ந்தோடிக் கொண்டிருப்பதை, இந்த முறைகேடு வெளிப்படுத்தியுள்ளது.

தனது சம்பந்தி பங்குதாரராக இருக்கும் நிறுவனங்களுக்கு 3120 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர்களைக் கொடுத்து, “ஊழலின்” முகத்துவாரமாக பதவியிலிருக்கும் முதலமைச்சர், தன் கீழ் உள்ள லஞ்ச ஊழல் தடுப்புத் துறையை வைத்து “மகனுக்கு ஒப்பந்தம் கொடுப்பதிலோ” “சம்பந்திக்கு ஒப்பந்தம் கொடுப்பதிலோ” என்ன தவறு இருக்கிறது?  என்று வாதாட வைக்கிறார். உறவினர்களுக்கு டெண்டர்களை வழங்கக்கூடாது; கான்டிராக்டுகளை வழங்குவதில் மிக உயர்ந்த நெறிமுறைகளைக் (high standard of ethics) கடைப்பிடிக்க வேண்டும்; மோசடி மற்றும் ஊழல்களில் (Fraud and Corruption) ஈடுபடக்கூடாது; ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு ஊழல் நடவடிக்கைகள் (Corrupt Practice), மோசடி நடவடிக்கைகள் (Fraudulent Practice), கூட்டுச்சதி நடவடிக்கைகள், (Collusive Practice) அதிகார துஷ்பிரயோகம் செய்து நிர்பந்தம் செய்யும் நடவடிக்கைகள் (Coercive Practice) போன்றவற்றில் உலக வங்கி நிதியுதவி பெறுவோர் ஈடுபடக் கூடாது என்ற உலக வங்கியின் “ஊழல் எதிர்ப்பு விதிகளை” எல்லாம் மீறி தனது மகன், சம்பந்தி இருக்கும் நிறுவனங்களுக்கு சகட்டு மேனிக்கு உலக வங்கி நிதியுதவியில் உள்ள டெண்டர்களைக் கொடுத்து ஊழல் புரிந்து வருகிறார்.

 

உலக வங்கியின் “ஊழல் எதிர்ப்பு விதிகளை” கடைப்பிடிக்காவிட்டால், தமிழகத்திற்கு கிடைக்கும் நிதியுதவியே கிடைக்காமல் போய் விடும் என்பது தெரிந்தும், தனது உறவினர்களுக்காக பொது வாழ்வில் நேர்மையைத் தொலைத்து விட்டு தடுமாறும் ஒரு முதலமைச்சரின் அவல நிலைமை, தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான தலைகுனிவு. இதனால் தமிழகத்திற்கு உலக வங்கி அளிக்கும் நிதியுதவி நிறுத்தப்பட்டு,  ஒட்டுமொத்த வளர்ச்சியே நிலைகுலைந்து போகும் மிகப்பெரிய ஆபத்தில் தமிழகத்தை கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை யாரும் மன்னிக்க மாட்டார்கள்.

 

ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது, ஊழல் வழக்கு விசாரணையை லஞ்ச ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை நடத்தி வருகிறது. அந்த விசாரணையில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. இப்படியொரு சூழலில் கூட இன்னும் தன் பொறுப்பில் உள்ள நெடுஞ்சாலைத்துறையில், 310 கோடி ரூபாய்க்கும்  மேற்பட்ட டெண்டர்களை “ஆன்லைனுக்குப் பதில்” நேரடியாகப் பெற்றுக்கொண்டு - தங்களுக்குக் கப்பம் கட்டும் நிறுவனத்திற்கோ, தன் உறவினர்களின் நிறுவனங்களுக்கோ டெண்டர்களைக் கொடுப்பதற்கான ஊழல் சித்து விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளார் முதலமைச்சர் என்பது சகித்துக் கொள்ள முடியாத சாபக்கேடு.  ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள “கரன்ஸி”களைக் குவிப்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருக்கிறார் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி என்பது இந்த தில்லு முல்லுகள் மூலம் மேலும் உறுதியாகிறது.

 

சேலம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை வட்டார அலுவலகம் முதல், தமிழகத்தில் உள்ள எந்த அலுவலகத்திலும் டெண்டர்களை நேரடியாகப் பெறுவது, ஊழல் செய்வதற்குத்தான் வழி வகுக்கும் என்பதால், நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர்களை நேரடியாகப் பெறும் முறையினை உடனடியாகக்  கைவிட்டு, இணைய வழி மூலமே டெண்டர்களைப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்போது வெளியிடப்பட்டுள்ள சேலம் மற்றும் சென்னை வட்டார அலுவலகங்களின் 310 கோடி மதிப்புள்ள டெண்டர் அறிவிக்கைகளையும் ரத்து செய்து விட்டு, இணைய வழியிலேயே டெண்டர்கள் பெறப்படும் என்ற அறிவிப்பினை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், அதற்கு மாறாக இந்த டெண்டர் ஊழல்களை ஊக்குவிக்க அதிகாரிகள் துணைபோவார்கள் என்றால், அவர்கள் அனைவரும் ஏதாவதொரு கட்டத்தில் சட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயமான நிலை ஏற்பட்டே தீரும் என்றும் எச்சரிக்க விரும்புகிச்றேன் என கூறியுள்ளர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்