Ex-soldier arrested for incident friend in drunk dispute

Advertisment

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பில்லியப்பா நகர் பகுதி சேர்ந்தவர் ரகோத்தமன்(54). இவர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இதேபோன்று வாலாஜாபேட்டை அடுத்த பூண்டி கிராமம்பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்(54) ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

ரகோத்தமன் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இருவரும் இணைந்து மது அருந்துவதை வாடிக்கையாக வைத்திருந்ததாகக்கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வாலாஜாபேட்டை அடுத்த பூண்டி பகுதியில் உள்ள ராஜேந்திரனின் வீட்டில் ரகோத்தமன் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் வழக்கம் போல மது அருந்தி கொண்டிருக்கும்போது திடீரென இருவருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதமானது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி உள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ராஜேந்திரன் கீழே இருந்த கட்டையை எடுத்து ரகோத்தமன் தலை மீது பலமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ரகோத்தமன் ரத்தம் வெளியேற சுயநினைவு இன்றி மயங்கி விழுந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த ரகோத்தமனை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் ரகோத்தமன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக்கூறினர்.

Advertisment

இதனைத்தொடர்ந்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாலாஜாபேட்டை காவல் துறையினர் ரகோத்தமனை தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக ராஜேந்திரனை கைதுசெய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.