Skip to main content

அ.தி.மு.க.வின் ஒற்றை தலைமை குறித்து விமர்சிக்க நீதிபதி என்ன தலைமைக் கழக உறுப்பினரா? முன்னாள் அ.தி.மு.க எம்பி ஆவேசம்

Published on 24/08/2022 | Edited on 24/08/2022

 

ex mp Kumar has criticized  judge comment admk single leadership

 

திருச்சியில் வரும் 28ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான, எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றுகிறார். இது  குறித்த ஆலோசனை  கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, முன்னாள் எம்.பி இரத்தினவேல், முன்னாள் எம்.பி, ப. குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முன்னாள் எம்பி ப.குமார், "வரும் மூன்றரை ஆண்டு காலத்தில் அதிமுக அரியணை ஏறுவதற்கு இது விதை விதைக்கின்ற காலம். நாம் அனைவரும் சேர்ந்து விதைத்தால் தான் வெற்றிகரமாக அறுவடை செய்ய முடியும். எனவே எந்த ஒரு தொண்டனையும் அ.தி.மு.க இழக்கக்கூடாது என்ற நோக்கில்தான் ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.கவை எடப்பாடி பழனிச்சாமி வழி நடத்துகிறார்.

 

எத்தனை இடர்கள் வந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி திறமையாக செயல்படுகிறார். இதனை தொண்டர்கள் உணர்ந்துள்ளார்கள். ஒரு இயக்கத்தை தொடங்க வேண்டும் என்றால் இயக்கத்தின் வளர்ச்சி, தொண்டர்களின் நலன் இதனை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும். இதனையே தாரக மந்திரமாக கொண்டு மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் அதிமுகவை வழி நடத்தினார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சுமார் நான்கரை ஆண்டு காலம் இயக்கத்திற்கு பல்வேறு சோதனைகள் வந்தது. இரட்டை தலைமை உருவாகியது. அ.தி.மு.கவை விட்டுப் பிரிந்த ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.கவிற்கு துரோகம் செய்து திமுகவுடன் எவ்வாறு இணக்கமாக செயல்பட்டார் என்பதை தொண்டர்கள் நன்கு அறிவீர்கள்.இன்று அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமருவதற்கு ஓபிஎஸ் தான் முக்கிய காரணம். அதிமுக வெற்றியை தடுத்து எடப்பாடி முதல்வராக வர முட்டுக்கட்டை போட்டவர்கள் ஓ.பி.எஸும், அவரது ஆதரவாளரான வைத்தியலிங்கமும் தான். ஓபிஎஸ் பக்கம் மூன்று எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில் தனக்கு எதிர்க்கட்சி பதவி வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கேட்கிறார்.

 

இது எந்த விதத்தில் நியாயம்? பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக வரவேண்டும் என ஒட்டுமொத்த தொண்டர்களும் விரும்புகின்றனர். பொதுக்குழு உறுப்பினர்கள், நியமனம் செய்யப்பட்டவர்கள் அல்ல நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இரண்டாவதாக வழங்கப்பட்ட தீர்ப்பில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி மனசாட்சியுடன் விசாரித்து இருந்தால் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தான் வந்திருக்க வேண்டும். அதிமுக தொண்டர்களால் வழிநடத்தப்பட வேண்டுமே தவிர நீதிமன்றங்களால் அல்ல. நீதிமன்றங்கள் வழி நடத்தினால் தொண்டர்கள் எதற்கு? நான்கரை ஆண்டு காலம் அரசையும் இயக்கத்தையும் ஒன்றாகத்தானே கொண்டு சென்றீர்கள்? தற்போது எதற்கு ஒற்றை தலைமை? என நீதிபதி கேள்வி எழுப்புகிறார். 

 

நீதிபதி ஏன் இந்த கேள்வியை எழுப்பி தீர்ப்பு வழங்குகிறார். நீதிபதியை தான் நாம் விமர்சிக்க கூடாது ஆனால் தீர்ப்பை விமர்சிக்கலாம். இதற்காக என் மீது வழக்கு பாயுமானால் அதை நான் நீதிமன்றத்தில் எதிர்கொள்கிறேன். அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து  விமர்சிக்க நீதிபதி என்ன தலைமைக் கழக உறுப்பினரா? கேள்வி எழுப்பிய முன்னாள் எம்பி  ப.குமார், அதிமுகவின் ஒற்றை தலைமைக்கு தகுதியானவர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்பதை உணர்ந்து செயலாற்றி வருகிறோம்.

 

துரோகிகள் வீழ்த்தப்படுவார்கள் எனவே தொண்டர்கள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். தனது சுயநலத்திற்காக நாளுக்கு நாள் இடத்தை மாற்றிக் கொண்டிருக்கும் ஓபிஎஸ், அதிமுகவில் இருந்து விலகி வெகு தூரம் சென்று விட்டார்.எனவே ஓபிஎஸ் ஒருபோதும் திரும்பி வர மாட்டார் தொண்டர்களும் அவரை சேர்க்க மாட்டார்கள்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.