Skip to main content

"அவரை வளர விடாதீர்கள்; ரொம்பவும் டேஞ்சரான ஆள்" - அமைச்சரை எச்சரித்த செங்கோட்டையன்!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

Ex. Minister Sengottayan and current minister Muthusamy met

 

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை, அதிமுகவின் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் திமுகவின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு செல்ல மாட்டார்கள். யாராவது அப்படி மீறி சென்றால் அவர் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவார். அவர் மறைந்தப் பிறகு, உறவினர்களாகவோ அல்லது மரியாதை நிமித்தமாகவோ அழைப்பு வந்தால் செல்லும் பழக்கம் ஏற்பட்டு வருகிறது. அதேபோல், துக்கம் விசாரிப்பதற்கும் இரு கட்சியினரும் சென்று வருகின்றனர்.  

 

இந்நிலையில், கடந்த வாரம், செங்கோட்டையன் உறவில் ஒரு துக்க நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அதை விசாரிக்க அதிமுக பிரமுகர்களான மாஜி வேலுமணி, எடப்பாடி மகன் மிதுன் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். அதேசமயம், திமுக அமைச்சரான முத்துசாமியும் அங்கே சென்றிருக்கிறார். அப்போது முத்துசாமியிடம், செங்கோட்டையன் சற்று சகஜமாக பேசியுள்ளார். அதில், ‘தோப்பு வெங்கடாசலம் உங்கள் கட்சிக்கு வந்திருக்கிறார். அவர் விசுவாசம் இல்லாதவர். அவரைக் கட்சியில் வளர விடாதீர்கள். ரொம்பவும் டேஞ்சரான ஆள்’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். அதற்கு முத்துசாமி, ‘நான் எல்லாவற்றிலும் கவனமானவன்’ என்று சொல்லியிருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது, மாவட்ட அரசியல் பற்றியும், பழைய நண்பர்கள் பற்றியும் இருவரும் மனம் திறந்து பேசியிருக்கிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கஞ்சா கடத்துபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது” - அமைச்சர் முத்துசாமி

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Government is taking strict action against cannabis  says Minister Muthusamy

ஈரோட்டில் 26.56 ஏக்கர் பரப்பளவில் உள்ள வ.உ.சி பூங்காவை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, ஆட்சியர் ராஜகோபால், சுங்கரா, மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பூங்கா மேம்பாட்டுப் பணிகளை ரூ.15 கோடியில் முதல்வர் அறிவித்தார். கூடுதல் நிதி திரட்டி அரசு மற்றும் தனியார் தனியார் கூட்டு முயற்சியின்  கீழ் பணிகள் மேற்கொள்ளப்படும். திட்டத்திற்கு சிறந்த கட்டிடக்கலை நிபுணர் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகள் விரைந்து நடைபெறும்.

ஈரோடு சோலார் பகுதியில் ஒருங்கிணைந்த காய்கறி மற்றும் மளிகை சந்தை அமைக்க ரூ.20 கோடி நிதியுதவியை முதல்வர் அறிவித்தார். இது அனைத்து வசதிகளுடன் வரும். அங்குள்ள 20 ஏக்கர் வெளியூர் பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும். ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் 13.5 ஏக்கர் நிலப்பரப்பில் மற்றொரு வெளியூர் பேருந்து நிலையம் வரவுள்ளது. மாநிலத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது

திமுகவில் கோடிக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர். ஒன்று அல்லது இருவர் தவறு செய்தால், ஒட்டுமொத்த கட்சியையும் அல்லது அரசாங்கத்தையும் குறை சொல்ல முடியாது. கட்சி கவனத்திற்குக் கொண்டு வரும் போதெல்லாம் தவறுகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. கஞ்சா கடத்துபவர்கள் மீது அரசும், திமுகவும் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.” என்றார்.

Next Story

அமைச்சர் நெஞ்சில் கை வைத்துத் தள்ளிய சி.ஐ.எஸ்.எஃப் வீரர்; கொதித்த தொண்டர்கள் 

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
CISF soldier who hugged Minister Muthusamy at the airport

தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டார். பின்னர், அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு, மும்பை செல்வதற்காக, பிற்பகல் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். மும்பையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, கோவையில் இருந்து அவர் விமானம் மூலம் கிளம்பினார். அப்போது, அவரை வழியனுப்ப கோவை விமான நிலையத்திற்கு வீட்டுவசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி வந்தார். 

முன்னதாக, கோவை விமான நிலையம் வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமான தொண்டர்கள் உதயநிதியை காணக் குவிந்திருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமான நிலையத்திற்குள் சென்றார். அப்போது, அவரை மட்டும் உள்ளே செல்ல மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அனுமதித்தனர். உடன் வந்த அமைச்சர் முத்துசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகளை அனுமதிக்க முடியாது என அனுமதி மறுத்துவிட்டனர். அப்போது, அங்கு பணியில் இருந்த சிஆர்பிஎப் வீரர், அமைச்சர் முத்துசாமியை விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்காமல் அவரது நெஞ்சில் கைவைத்து தடுத்து தள்ளிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த திமுக தொண்டர்கள் ஆவேசமடைந்தனர்.

இதனால் விமான நிலையத்திற்கு வந்திருந்த திமுக தொண்டர்கள் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் அவர் அமைச்சர் எனத் தெரியவில்லை எனக் கூறியதாகத் தெரிகிறது. அப்பொழுது, அமைச்சர் யார் என்று கூடத் தெரியாமல் பாதுகாப்புப் பணிக்கு எப்படி வருகிறார்கள் எனக்கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் விமான நிலையத்தில்  பரபரப்பான சூழல் நிலவியது. 

இதனைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி விமான நிலையத்திற்குள் சென்று உதயநிதி ஸ்டாலினை வழி அனுப்பி வைத்துத் திரும்பினார். பின்னர், சம்பவம் குறித்தான செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் முத்துசாமி, பாதுகாப்பு கருதிதான் CISF வீரர்கள் அப்படி செய்தார்கள். இதனை பெரிதாக்க வேண்டாம். பாதுகாப்பு படையினர் சரியாக கவனிக்காமல் இருந்துவிட்டனர் எனவும் அதே சமயம் பாதுகாப்பு என்பது முக்கியம் என்பதால் தான் அதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். அதே சமயம். இதை அவர்கள் வேண்டுமென்றே செஞ்சிருந்தா எங்களது ஆக்‌ஷனும் வேறு மாதிரி இருந்திருக்கும் எனக் கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த சம்பவத்தால் கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், அமைச்சர் முத்துசாமியின் முதிர்ச்சியான பதிலால் இந்த பிரச்சனை பெரிதாகாமல் பேசித் தீர்க்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.