Skip to main content

தப்ப முயன்ற முன்னாள் ஆய்வாளர்; மடக்கிப் பிடித்த போலீஸ் 

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

Ex-inspector vasanthi who tried to escape from Police  has been arrested

 

புதுக்கோட்டை மாவட்டம், நாகமலை காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் வசந்தி. சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்தவர் அர்ஷத். இவர் பேக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். அர்ஷத், தனது தொழில் சம்பந்தமாக ரூ. 10 லட்சத்துடன் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் புதுக்கோட்டை நாகமலை பகுதிக்கு வந்தார். அப்போது, வசந்தி தனது கூட்டாளிகளான பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைக்காசி ஆகிய நான்கு பேருடன் அர்ஷத்தை வழிமறித்து சோதனை எனச் சொல்லி அவர் வைத்திருந்த ரூ. 10 லட்சத்தை பறிமுதல் செய்தார். 

 

அதனைத் தொடர்ந்து அர்ஷத், நாகமலை காவல்நிலையத்திற்குச் சென்று ஆவணங்களை காட்டி, தனது பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் வசந்தி, பொய் வழக்கு போட்டு சிறையில் அடைப்பேன் என அர்ஷத்தை மிரட்டியுள்ளார். இதனால் அர்ஷத், மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார். அர்ஷத் கொடுத்த புகாரின் அடிப்படையில் வசந்தி உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

வழக்குப் பதிவானதை அறிந்த வசந்தி உடனே தலைமறைவானார். இந்த வழக்கில் வசந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து வசந்தியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸ் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. இதில் வசந்தி, கோத்தகிரி பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருப்பதைக் கண்டறிந்து அங்கு சென்ற தனிப்படையினர் அவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து வசந்தி, ஜாமீன் பெற்று வழக்கை சந்தித்து வந்தார். 

 

Ex-inspector vasanthi who tried to escape from Police  has been arrested

 

ஜாமீன் பெற்ற வசந்தி வழக்கின் புகார்தாரர்களை மிரட்டி சாட்சிகளை கலைக்க முயற்சி செய்தார். இதன் காரணமாக, மிரட்டலுக்குள்ளான நபர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அவர் அளித்தப் புகாரின் அடிப்படையில், சாட்சிகளை கலைத்தல் எனும் பிரிவின் கீழ் வசந்தி மீது தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து வசந்தியை கைது செய்ய, தென் மண்டல ஐ.ஜி. அஸ்ராக் கார்க் ஆலோசனையின் பேரில், ஸ்ரீவில்லிப்புத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.

 

டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று காலை மதுரை ஊமச்சிகுளம் பகுதியிலுள்ள வசந்தியின் வீட்டுக்குச் சென்றனர். அப்போது வசந்தி அவர்களிடமிருந்து தப்பித்து வெளியே செல்ல முயன்றார். உடனடியாக போலீஸார், அவரை சுற்றி வளைத்தனர். இருப்பினும், அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, பெண் காவல்துறை அதிகாரிகள் குண்டுக் கட்டாகத் தூக்கியும், இழுத்துச் சென்றும் வசந்தியை கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.