Skip to main content

“யானையுடன் சுண்டெலியை ஒப்பிடுவது எப்படி சரியாகும்” - ஓ.பி.எஸ்ஸை விமர்சித்த திண்டுக்கல் சீனிவாசன்

 

ex admk minister dindigul srinivasan talk about ops

 

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தில் கட்சி நிர்வாகிகளான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமராஜ் மற்றும் கூடலூர் நகர கழக செயலாளர் அருண்குமார் ஆகியோர் இல்ல திருமண விழாவிற்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை வருகை தர உள்ளார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.

 

ஆனால் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக தேனி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதால் கழக அமைப்புச் செயலாளர் எஸ்.டி.கே. ஜக்கையன் தலைமையில் தேனி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், வட புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அன்னபிரகாஷ், தேனி ஒன்றிய பொறுப்பாளர் நாராயணசாமி, ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு  மிகப் பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

அதன்படி தேனி வடபுதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புறவழிச்சாலை பிரிவில் கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி  பழனிசாமி அவர்களுக்கு மிகப் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கும் வகையில், கேரள செண்டை மேளங்கள், கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் தமிழ் பாரம்பரிய கலைகளான மேளதாளங்கள் முழங்க சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வரவேற்பு அளிக்க உள்ளனர். 

 

ex admk minister dindigul srinivasan talk about ops

 

இதனைத் தொடர்ந்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கம்பம் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக வருகை தரவுள்ள கழக இடைக்கால பொதுச் செயலாளரை வரவேற்பதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கழக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர், கழக அமைப்புச் செயலாளர் எஸ்.டி.கே. ஜக்கையன் தலைமையிலான விழாக்குழுவினரிடம் ஆலோசனை நடத்தினர். மேலும் இடைக்கால பொதுச் செயலாளரை வரவேற்கும் பகுதி, முக்கிய பிரமுகர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்களின் வாகன நிறுத்த பகுதி, மேடை அமைய உள்ள பகுதி என தேனி முதல் கம்பத்தில் உள்ள திருமண மண்டபம் வரை அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

 

அதன்பின் தேனியில் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சரும் கழக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, “திண்டுக்கல்  நாடாளுமன்ற  இடைத்தேர்தலில் எம்.ஜி .ஆர். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றது போல, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெறும். ஒரு கட்சி என்றால் தேர்தலில் போட்டியிட வேண்டும். ஆனால் தேர்தலில் விட்டு கொடுப்போம் என ஓ.பி.எஸ் கூறுவது விந்தையாக உள்ளது. அதிமுக இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை என்பது பொய்யான தகவல். எங்களோடு ஓ.பி.எஸ்-ஐ ஒப்பிடுவதையே அவமானமாகக் கருதுகிறோம். ஓ.பி.எஸ் சுண்டெலி ஈ.பி.எஸ் யானை. யானையுடன் சுண்டெலியை ஒப்பிடுவது எப்படி சரியாகும்? திமுக ஆட்சியில் மக்களுக்கு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாமல் அல்வா கொடுத்தது குறித்து இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வோம்”என்று கூறினார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !