Skip to main content

கொஞ்சமாவது ரோஷம் இருந்தால், மோடி உடனடியாக... ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி!!

Published on 12/12/2018 | Edited on 12/12/2018

தமிழக காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்தார் 

அப்போது அவர் கூறும்போது, 

 

 

"காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பதவியேற்றபோது, மோடிக்கு இவர் சரிசமமாக இருப்பாரா, மோடிக்கு நிகராக இருப்பாரா என்றெல்லாம் சொன்னவர்கள், இன்றைக்கு மோடியை வீழ்த்தக்கூடிய மிகபெரிய சக்தியாக மாறியிருக்கிறார். ஓராண்டு காலத்திற்குள்ளாகவே பாஜகவின் மிகப்பெரிய கோட்டைகளாக திகழ்ந்தவற்றை, ராகுல் காந்தி தகர்த்து இருக்கிறார். இன்னும் நான்கு மாதத்தில் நடைபெற இருக்கிற மக்களவைத் தேர்தலிலும், காங்கிரஸை மிகப்பெரிய வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் பலம் ராகுல் காந்திக்கு உண்டு என சொல்கிறார்கள்.

.

evks

 

காங்கிரசும் அதன் கூட்டணிக்கட்சிகளும் வெற்றி பெறும் என்பது மட்டுமல்ல, ராகுல்காந்தி விரைவில் இந்த நாட்டின் பிரதமராக வருவதற்கான நல்ல சூழ்நிலைகள் ஏற்பட்டு இருக்கிறது. மோடியைப் பொறுத்தவரை இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு, அவருக்கு கொஞ்சமாவது ரோஷம் இருந்தால், உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். ஏனென்றால் என்னை யாரும் வீழ்த்த முடியாது, என்னை வீழ்த்த இந்தியாவில் யாரும் பிறக்கவில்லை என்றெல்லாம் எள்ளி நகையாடினார். ராகுல்காந்தியை சிறுவன், பொடியன் என்றெல்லாம் கேலி பேசினார். ஆனால், இன்றைக்கு மிகப்பெரிய தோல்வியைப் பெற்று இருக்கின்ற மோடி, உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். ஜனநாயகத்தில் கொஞ்சமாவது நம்பிக்கை இருக்குமேயானால், அவர் கண்டிப்பாக ராஜினாமா செய்ய வேண்டும். 

 

 

அதேபோல், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், 24 மணி நேரமாக எதையோ பிதற்றிக்கொண்டு இருக்கிறார். அவரது பேச்சு மரணஓலம் போல் இருக்கிறது. நாங்கள் இந்த இந்த தேர்தலில் தோல்வி அடையவில்லை. இது வெற்றிகரமான தோல்வி என்று தமிழிசை சொல்கிறார். இது என்ன வெற்றிகரமான தோல்வி என்று எனக்குப் புரியவில்லை. ஒன்று ஆணாக இருக்க வேண்டும்; இல்லையென்றால் பெண்ணாக இருக்க வேண்டும்; நடுவிலே ஏதோ ஒன்று என்பது போல, வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை என்பது போல் தமிழிசை சொல்வது இருக்கிறது.தோல்வியில் சிறிய தோல்வி, பெரிய தோல்வி என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை. 10 ரூபாய் திருடினாலும், ஒரு லட்ச ரூபாய் திருடினாலும் திருடன், திருடன் தான். ஆகவே, தோல்வி என்பதை சிறிய தோல்வி, பெரிய தோல்வி என்று சப்பைக்கட்டு கட்டுவது, தமிழிசைக்கு ஏற்றதல்ல. அவரைப் பொறுத்தவரை விரக்தியின் உச்சகட்டத்தில் சென்று விட்டார். 

 

 

தினந்தோறும் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுவது எல்லாம் விரயமாகிக் கொண்டு இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, தமிழிசை பாஜகவை விட்டு வெளியேறி ஒரு தனிக்கட்சி ஆரம்பித்தால், ஏதாவது கொஞ்சம் உபயோகமாக இருக்கும். ஏதாவது ஒரு ஊரிலே, ஒரு வார்டிலே வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை ஏற்படும். 

 

 

தேர்தல் முடிவு என்பதை ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றியாகவும், மோடியின் நடவடிக்கைகள், திட்ட்டங்களில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது. ஆகவே, இது ராகுல்காந்திக்கு வெற்றியாகவும், மோடிக்கு தோல்வியாகவும் அமைந்துள்ளது. 

 

கஜா புயல் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து கமிஷன் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஈரோட்டிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் லட்சக்கணக்கான போர்வைகள் விற்பனையாகாமல் முடங்கிக் கிடக்கின்றன. அவற்றை நிவாராணத்திற்கு வழங்க வாங்காமல், ஆந்திராவில் இருந்து குறைந்த விலையில், தரம் குறைந்த போர்வைகளை வாங்கி விநியோகித்து, கமிஷன் அடித்து இருக்கிறார்கள். இங்கு பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு உதவி செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்கே முடங்கிய போர்வைகளை அவர்கள் நிவாரணப் பணிக்கு பயன்படுத்தி இருந்தால், இங்குள்ள நெசவாளர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஏனென்றால் ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருக்கிற நெசவாளர்களின் போர்வைகள் தரம் வாய்ந்ததாகவும், விலை குறைவாகவும் இருக்கிறது. அதைப்பயன்படுத்தாமல் கமிஷனுக்காக வெளி மாநிலங்களில் இருந்து போர்வைகளை வாங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது. 

 

 

புயல் நிவாரணத்திலும் ஊழல், கமிஷனில் அரசு ஈடுபடுமானால், கண்டிப்பாக தமிழக மக்கள் அதிமுகவிற்கு டெபாசிட் கூட கிடைக்காத நிலையை ஏற்படுத்துவார்கள்.

 

அரசு மதுபானக்கடைகளை நாங்கள் மூடுவோம் என்று சொன்னவர்கள், இன்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் பல மதுக்கடைகளை புதிதாகத் திறந்து இருக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. அங்குள்ள மக்கள் ஒருநாள் உணவிற்கே கஷ்டப்படும் நிலையில், அவர்களுக்கு கிடைக்கும் 200, 300 ரூபாயை மதுக்கடைகளில் செலவிட இந்த அரசு ஏற்பாடு செய்து விட்டால், அவர்களது குடும்பத்தின் கதி என்னவாகும் என நினைத்துப் பார்க்க வேண்டும். ஆகவே, அங்கு டாஸ்மாக் கடைகளைத் திறந்தது தவறு; உடனடியாக கடைகளை மூட வேண்டும். 

 

திமுக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. ஸ்டாலின் மிகத்தெளிவாக அறிவித்து இருக்கிறார்கள். இந்த கூட்டணியைப் பொறுத்தவரை சில செய்திகள் பத்திரிகைகளில் பெரிதுபடுத்தப்படுகின்றன. திருமாவளவனுக்கும், வைகோவிற்கு கருத்து வேறுபாடு என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால், நேற்றே அவர்கள் இருவரும் சந்தித்து பேசி விட்டனர். ஆகவே, திமுக -காங்கிரஸ் கூட்டணி மிக பலமாக இருக்கிறது. வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி புதுச்சேரியையும் சேர்த்து 40 இடங்களிலும் வெற்றி பெறும். 

 

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ்க்கு எவ்வளவு எண்ணிக்கை, எந்தெந்த இடங்கள் என்பதெல்லாம், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு, ஸ்டாலினும், ராகுல்காந்தியும் பேசி முடிவு எடுப்பார்கள்.  

 

பாஜகவிற்கு எதிரான திமுக - காங்கிரஸ் கூட்டணி மிக வலுவாக, மிக பலமாக இருக்கும். மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றியை, தமிழக மக்கள் தங்களுடைய வெற்றியாகக் கருதி கொண்டாடுகின்றனர். எல்லா இடங்களிலும் மக்கள் எனக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தது, தமிழகத்திலும் மோடிக்கு சமாதி கட்டப்படும் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கின்றனர். 

 

 

குட்கா ஊழலில் அமைச்சர் தவறு செய்து இருக்கிறார் என்பதை ஆதாரத்தோடு பிடித்து இருக்கின்றனர். ஆகவே, அவரது உதவியாளரை விசாரணைக்கு அழைப்பது, சமையல்காரரை விசாரணைக்கு அழைப்பது, ஓட்டுநரை விசாரணைக்கு அழைப்பது என்பதெல்லாம் தேவையற்ற ஒன்று. நேரடியாக, சம்பந்தப்பட்ட அமைச்சரையே கைது செய்து விசாரணை செய்ய வேண்டும்.

 

தமிழகத்தில் பாஜக அநாதையாகத்தான் நிற்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த வெற்றிகளுக்குப் பிறகு, இங்குள்ள எந்தக்கட்சியும் அவர்களோடு கூட்டு சேர வாய்ப்பில்லை. அதிமுகவோ, தினகரன் கட்சியோ, யாரும் நெருப்பை தங்கள் தலையில் கொட்டிக்கொள்ள மாட்டார்கள்.  விவசாயிகளுக்கு பாதகமில்லாமல் உயர்மின் கோபுரங்கள் அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்டால், அதற்குரிய நஷ்டஈட்டை வழங்க வேண்டும். 

 

 

கமல் கட்சி ஆரம்பித்து விட்டார். ரஜினியைப் பொறுத்தவரை அவரது படம் வெளிவரும் முன்பு ஏதாவது ஸ்டண்ட் அடிக்க வேண்டும் என்பதற்காக 20 சதவீதம், 30 சதவீதம்  பணி முடிந்தது என்று கதை சொல்லிக் கொண்டு இருக்கிறார். அவர் கட்சி ஆரம்பிப்பார் என்ற நம்பிக்கையும் இல்லை. கட்சி ஆரம்பிக்காமல், நிம்மதியாக இருங்கள்; பாஜகவின் வலையில் விழுந்து விடாதீர்கள் என்பதுதான் ரஜினிக்கு நான் சொல்லும் அறிவுரை.

 

ரிசர்வ் வங்கி தலைமை அதிகாரி, பொருளாதார ஆலோசகர் ராஜினாமா செய்ய மோடியின் மோசமான ஆட்சியே காரணம். இத்தனை பேர் ராஜினாமா செய்வதை விட, மோடி ராஜினாமா செய்து விட்டால் பிரச்சினை தீரும்.  

 

‘தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் செயல்பாடுகள் குறித்து கேட்டபோது’, ‘தேர்தலிலே காங்கிரஸ் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியுடன் உங்களைப் பார்த்து பேசிக்கொண்டு இருக்கிறேன். இந்த நேரத்தில் அநாவசியமான கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஏனேன்றால் வெற்றியைக் கொண்டாடும் நேரத்தில் சில தேவையில்லாத, விஷயங்களைப் பேச விரும்பவில்லை’ என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.