
கடந்த 3ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தருமை ஆதீனம், மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் காரில் பயணித்த பொழுது உளுந்தூர்பேட்டை அருகே உளுந்தூர்பேட்டை-சேலம் சந்திப்பு சாலையில் அவர் சென்ற கார் மற்றொரு கார் மீது உரசியது.
இதனைத் தொடர்ந்து, அன்று நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், “கொலை செய்ய சதி பண்ணிவிட்டார்கள். தருமை ஆதீனத்தின் ஆசி தான் என்னைக் காப்பாற்றியது. மீனாட்சி சுந்தரேசர் பெருமாள் தானே என்னைக் காப்பாற்றினார். இல்லையென்றால் இந்த இடத்தில் நான் இருப்பேனா” என பேசி இருந்தார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மதுரை ஆதினமும், அவரது ஓட்டுநர் செல்வமும், கொலை செய்ய சதி நடப்பதாகக் குற்றச்சாட்டியிருந்தனர். இந்த குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், இதுகுறித்து எந்த தரப்பிலும் புகார் தெரிவிக்கப்படவில்லை.
இதையடுத்து, இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் அந்த சம்பவம் விபத்து எனவும், கொலை செய்வதற்கான முயற்சி எதுவும் இல்லை எனவும் விளக்கமளித்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்டதே இந்த விபத்து என்று தெரியவந்துள்ளது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனம் அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்துள்ளது’ எனக் கூறி அது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டனர். தொடர்ந்து, அதிவேகமாக கார் ஓட்டிய புகாரின் மதுரை ஆதினத்தின் ஓட்டுநர் செல்வம் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''இந்தியாவே ஒரு அச்சுறுத்தலில், மிகப்பெரிய பிரச்சினையில் இருக்கும் சூழ்நிலையில் திடீரென மதுரை ஆதீனம் தன்னை கொல்வதற்கு தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக சொன்னவுடன் நாங்களெல்லாம் அதிர்ச்சி அடைந்தோம். வேதனை அடைந்தோம். ஆனால் அதன் பிறகு காவல்துறை மூலமாக வெளியிடப்பட்ட சிசிடிவி காட்சி பார்த்தவுடன் இவர் சொன்னது ஒன்று கூட நடக்கவில்லை.
ரொம்ப தூரத்தில் இருந்தே என்னுடைய வாகனத்தை பின் தொடர்ந்து வந்தார்கள் என மதுரை ஆதீனம் சொன்னார். ஆனால் மதுரை ஆதினம் வந்த கார் சென்ற சாலை வேறு. அவர்கள் வந்த சாலை வேறு. நான்கு வழி சந்திப்பில் ரவுண்டானா பகுதியில் மதுரை ஆதீனத்தின் கார் வேகமாக போகும்போது இவர்களுடைய கார் லேசாக உரசியது. ஆனால் மதுரை ஆதீனம் என்ன சொன்னார் 'பேரிகார்டை முட்டி என்னுடைய வாகனத்தை வேண்டுமென்று திட்டமிட்டு மோதினார்கள். நான் நிலைகுலைந்து போய் விட்டேன்' எனப் பேசினார். அவர் பேசியதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. அப்புறம் தான் தெரிந்தது மதுரை ஆதீனம் சொல்வதெல்லாம் பொய். முழுக்க முழுக்க பொய். எதற்கு தேவையில்லாமல் வேண்டுமென்றே திட்டமிட்டு ஆதாயத்திற்காக மதுரை ஆதீனம் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்து மக்கள் கட்சி சார்பாக மதுரை ஆதினத்தின் பேச்சை நாங்கள் கண்டிக்கிறோம்'' என்றார்.