Skip to main content

அச்சம் வேண்டாம்... எல்லாம் தயார் நிலையில் உள்ளது -ஈரோடு கலெக்டர் தகவல்

Published on 25/03/2020 | Edited on 25/03/2020

 

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், பெருந்துறை அரசு மருத்துவமனையை கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது 68 படுக்கைகள் தயாராக உள்ளன. ஈரோடு அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய அனுமதிக்கப்பட்டவர்கள், பெருந்துறை சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். 


பெருந்துறை சிறப்பு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் உள்ளனர். தேவையெனில் அருகில் உள்ள ஆரம்பரசுகாதார நிலையங்களில் இருந்து மருத்துவர், செவிலியரை பணியமர்த்திக் கொள்ளலாம்.

 

Erode



கரோனா வைரஸ் தொற்று உள்ளதாகக் கூறி தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நோயாளிக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்குச் செல்லும், அவசியம் ஏற்பட்டால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சையளிக்கப்படும். ஒரு வெண்டிலேட்டர் மூலம் பத்து படுக்கைகளை இணைக்க முடியும். இந்த வகையில் பெருந்துறை சிறப்பு மருத்துவமனையில் 8 வெண்டிலேட்டர்கள் உள்ளதால், 80 பேருக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்க முடியும்.
 

மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று உள்ள அனைவரும் பெருந்துறை சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரப்போவதில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக தனி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்றால் 150 படுக்கைகள், தனியார் மருத்துவமனைகளில் 20 சதவீத படுக்கைகள் கரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 

 

முதல்வர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்துள்ள தனியார் மருத்துவமனைகளும் கரோனா சிகிச்சைக்காக படுக்கைகளை ஒதுக்க வேண்டும். எல்லா மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்காக யாரும் பயப்படத் தேவையில்லை. 
 

தமிழகத்தில் இன்று 24ம் தேதி மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இதன்படி, அலுவலகங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது. தொழிற்சாலைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் மளிகை, பால், காய்கறிக் கடைகள் திறந்து இருக்கும். பொதுமக்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். கும்பலாக வந்து பொருட்களை வாங்கக் கூடாது. 
 

பெருந்துறை அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்பால் தற்போது வரை 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள். வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து ஈரோடு வந்தவர்களில் கரோனா தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய  71 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அது தற்போது 127 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 25 நாட்கள் கண்காணிப்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுத்தப் பட்டதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 42 பேர் கண்டறியப்பட்டு, அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

 

Erode


 

கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாய்லாந்து நாட்டினர் தங்கியிருந்த ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் 169 குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு நல்ல ஒத்துழைப்பினை அளிக்கின்றனர். அவர்களுக்கு காய்கறி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொபைல் ஏடிஎம் வசதி செய்து தரப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவர்கள் அப்பகுதியில் தயார் நிலையில் உள்ளனர் என்றார்.
 

முன்னதாக ஈரோடு பேருந்து நிலையத்தில் தனியார் நிறுவனமான அக்கினி ஸ்டில்ஸ் ஏற்பாடு செய்த கிரிமிநாசினி மிஷின் மூலம் பேருந்து நிலையம் முழுக்கவும் மருந்து தெளிக்கப்பட்டது. 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.