Skip to main content

''எல்லோரும் முத்தத்தில்தான் பிறந்தோம்!''; கலைஞரின் நகைச்சுவை சரவெடி!!

Published on 08/08/2018 | Edited on 27/08/2018
kk

 

திமுக தலைவர் கலைஞர் தொடாத எல்லைகளே இல்லை. கலை, இலக்கியம், அரசியல் என இறுதிமூச்சு வரை பல தளங்களிலும் வெற்றிகரமாக பயணித்தவர். சட்டப்பேரவையிலும், பொது வெளியிலும் சொல்ல வந்த சேதியை சமயோசிதமாக நகைச்சுவையுடன் சொல்லி எல்லோரின் கவனத்தையும் ஒருங்கே ஈர்த்துவிடும் பாங்கு கலைஞருக்கு மட்டுமே உரித்தானது. அரசியல் தளத்தில் அவரை எதிர்ப்போர்கூட அவரின் நகைச்சுவையை விரும்பி ரசிப்பார்கள்.


கவிஞர் தெய்வச்சிலை, 'கலைஞரின் நகைச்சுவை நயம்' என்ற தலைப்பில் சட்டப்பேரவை, விழாக்கள், செய்தியாளர்கள் சந்திப்பு, கட்சிக் கூட்டங்களில் கலைஞர் நகைச்சுவையாக சொன்ன 200 தகவல்களை தொகுத்து நூலாக வெளியிட்டு இருக்கிறார். நமது நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் இந்த நூலை வெளியிட்டுள்ளது. அந்த தொகுப்பில் இருந்து....


* கடவுள் இருக்கிறாரா? இல்லையா? 


கடந்த 2006ம் ஆண்டு, அக்டோபர் மாதம் சன் டிவியில் ஒளிபரப்பான நேருக்குநேர் என்ற நிகழ்ச்சியில் கலைத்துறையினர் சம்பந்தப்பட்டவர்களின் கேள்விகளுக்கு கலைஞர் பதில் அளித்தார். 


அப்போது ஒருவர், ''உங்களுடைய இத்தனை ஆண்டு வாழ்க்கையில் என்றைக்காவது ஒரு கணம், ஒரு நிமிடம் கடவுள் இருந்தாலும் இருப்பார்னு எப்பவாவது தோன்றியிருக்கிறதா?,'' எனக் கேட்டார்.


அதற்கு கலைஞர், ''என் வாழ்க்கையில் அந்த கணம் குறுக்கே வராததற்கு அந்தக் கடவுள்தன் காரணமோ என்னமோ தெரியவில்லை,'' என பட்டென பதில் அளித்தார். இந்த பதிலால் தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.


* முற்றமா? முத்தமா?


முன்னாள் அமைச்சரும் கலைஞரின் நெருங்கிய நண்பருமான மன்னை நாராயணசாமி, கருணாநிதியைத் தனது இல்லத்திற்கு அழைத்து இருந்தார். அவருடன் தாழை மு.கருணாநிதி, தென்னரசு ஆகியோரும் சென்றிருந்தனர்.


முதன்முறையாக வீட்டிற்கு வந்த தன் நண்பர்களிடம் மன்னையார், தனது வீட்டைச் சுற்றிக்காட்டி பால்யகால நினைவுகளை பகிர்ந்து கொண்டார். ''இது திண்ணை, இது கூடம், இது தாழ்வாரம் எனச் சொல்லிக்கொண்டே வந்தவர், இது முத்தம் (கிராமப்புறங்களில் முற்றத்தை முத்தம் என்று பேச்சுவழக்கில் சொல்வார்கள்) எனக் காட்டினார். இந்த முத்தத்தில்தான் நான் பிறந்தேன்,'' என்றார். 


உடனே கலைஞர் கொஞ்சமும் தாமதிக்காமல், ''நீங்கள் மட்டுமா? எல்லாருமே முத்தத்தில்தான் பிறந்தார்கள்,'' என்றதும், மன்னையார் உள்பட அனைவருமே நகர முடியாமல் சிரித்தபடியே இருந்தார்களாம்.


* காதலுக்கு பச்சைக்கொடி


1969ம் ஆண்டு மார்ச் மாதம். சட்டப்பேரவை விவாதத்தின்போது திருத்தணி எம்எல்ஏ கே.விநாயகம் பேசுகையில், ''மெரினா கடற்கரையில் ஒரு பகுதியில் 'லவ்வர்ஸ் பார்க்' (காதலர் பூங்கா) இருக்கிறது. அங்கு மற்றவர்கள் நுழையாமல் காதலர்கள் சுதந்திரமாக இருக்கும் நிலையை அரசு ஏற்படுத்தித் தருமா?. தருமா? என்பதைவிட தர வேண்டும் என வேண்டுகிறேன். 


உடனடியாக பதில் அளிக்க எழுந்த கலைஞர், ''இந்த விஷயத்தில் விநாயகத்துக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் இந்த அரசு பார்த்துக் கொள்ளும்,'' என்றார் சட்டென. 


இந்தப் பதிலால் பேரவையில் எழுந்த சிரிப்பலை, மெரினாவில் அமர்ந்திருந்த மற்ற காதலர்களைச் சீண்டிப் பார்த்துவிட்டுப் போனதாம்.


* முதலைக்கு முதலை


1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் எட்டாம் நாளில் சட்டப்பேரவை நடவடிக்கையின்போது முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏ அப்துல் லத்தீப் பேசுகையில், 


''கூவம் ஆற்றில் முதலை இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதனால் அங்கே அசுத்தம் வெகுவாக குறைந்து விட்டது. எனவே முற்றிலும் அசுத்தத்தைப் போக்க, கூவம் ஆற்றில் அரசு முதலைகளை விடுவது பற்றி ஆலோசிக்குமா?,'' என்றார். 


அதற்கு பதில் அளிக்க எழுந்த கலைஞர், ''ஏற்கனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் 'முதலை' கூவம் ஆற்றில் போட்டு இருக்கிறது...'' என முடிப்பதற்குள் கருணாநிதியின் கணநேரத்து நகைச்சுவை பதிலைக் கேட்டு பேரவையே ஆரவாரச் சிரிப்பில் மூழ்கியது.


* 1973ம் ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடந்து வந்தது. அந்த விவாதத்தின்போது... 


எம்எல்ஏ காமாட்சி: ''மதுரை மீனாட்சிக்கு வைர அட்டிகை, வைர கிரீடம் இன்னும் இருக்கிற பல நகைகளின் மொத்த மதிப்பு எவ்வளவு என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவிப்பாரா?,'' எனக் கேட்டார்.


கலைஞர்: ''அறநிலையைத்துறை அமைச்சர், மீனாட்சிக்கு இருக்கின்ற சொத்து மதிப்பைச் சொன்னால் காமாட்சிக்கு பொறாமை ஏற்படாதா?,'' என்றார்.


அவர் இப்படிச் சொன்னதுதான் தாமதம்... அனைத்து எம்எல்ஏக்களும் தங்களது வெடிச்சிரிப்பால் பேரவையையே அதிர வைத்தனர். முதல்வர் கலைஞர் குறிப்பிட்டது எம்எல்ஏ காமாட்சியை மட்டுமல்ல, காஞ்சியில் வீற்றிருக்கும் காமாட்சியையும் சேர்த்துதான் என புரிந்து கொண்டதால் அவையே அமளிக்காடானது.


* சுயமரியாதைக்கு ஆயுள் அதிகம்


ஒரு சமயம், இசை சித்தர் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சிதம்பரம் ஜெயராமனுக்கு மயிலையில் திரைப்பட இசைக்கலைஞர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. அந்த விழாவில் கலைஞர் பங்கேற்று பேசுகையில், 


''1944ம் ஆண்டில் இசை சித்தரின் சகோதரி பத்மாவதியை என் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றேன். ஒரே நாளில்தான் எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. அவருடைய திருமணம் புரோகிதர் புடைசூழ நடந்தது. எனது திருமணம் நாவலர் தலைமையில் நடந்தது.


திருமணம் முடிந்த மூன்றே மாதங்களில், இசை சித்தர் தனது மனைவியை இழந்தார். ஆனால், நான் என் மனைவியோடு மூன்று ஆண்டுகள் வாழ்க்கை நடத்தினேன். இதை ஒருமுறை அவரிடம் வேடிக்கையாக, பார்த்தீர்களா? வைதீக திருமணத்தைவிட, சீர்திருத்த திருமணத்திற்கு வயது அதிகம்,'' என்றேன்.


வாய்ப்பு கிடைக்கின்ற போதெல்லாம் திமுகவின் சித்தாந்தங்களை பரப்புரை செய்வதில் கலைஞருக்கு நிகர் வேறு யாருமில்லை என்பதற்கு இந்த நிகழ்வும் சான்றாக அமைந்தது. ஒரு துயர சம்பவத்தைக்கூட தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு சொல்லிய கலைஞரின் இயல்பை திரண்டிருந்த ஆன்மீக அன்பர்களும், வைதீகக் கூட்டமும் ரசித்துச் சிரித்தது. 


* 'தங்க'மான சிரிப்பு


ஒருமுறை சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம். அப்போது கலைஞரின் நெருங்கிய நண்பர் கைபிரம்மையா என்பவர் தனக்கும் மாநகராட்சி தேர்தலில் நிற்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கலைஞரிடம் வைத்தார்.


கலைஞர்: உமக்கு செல்வாக்கு எப்படியுள்ளது? சீட்டு கொடுத்தால் வெற்றி பெறுவீரா?


பிரம்மையா: தொகுதியிலே எல்லாரையும் எனக்குத் தெரியும். எல்லோரிடமும் நான் நல்லவிதமாகச் சிரித்துப் பேசி நல்ல உறவை வைத்திருக்கிறேன். எனவே நிச்சயம் வெற்றி பெற்று விடுவேன்.


கலைஞர்: அதாவது, பல்லைக் காட்டி வெற்றி பெறுவேன் என்கிறீர். அதுவும் வெறும் பல்லை அல்ல. தங்கப்பல் வேறு கட்டியிருக்கிறீர். தங்கத்தைக் காட்டி வாக்குகளை அள்ளி விடுவேன் என்ற நம்பிக்கை உமக்கு இருந்தால் யோசிக்கலாம்.


(இந்த உரையாடல்களைக் கேட்டு உடனிருந்த அனைவரும் பல்லைக் காட்டி சிரித்தபோது, சிரிப்பை அடக்க முடியாமல் பிரம்மையா தங்கப்பல்லை மூடியபடி சிரித்துக்கொண்டே விடைபெற்றுச் சென்றுவிட்டார்).

* முரசொலி நாளிதழில் 30.5.2007ம் தேதியன்று கலைஞர் வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை:


கேள்வி: ஹெல்மெட் அணிவதற்கான தேதி தள்ளி வைக்கப்படுமா?


கலைஞர் பதில்: தலையில் இடம் இல்லை என்றால் தள்ளி வைத்துக்கொள்ளலாம்.

* 30.6.2007ல் முரசொலியில்...


கேள்வி: நாட்டில் போலிச்சாமியார்கள் அதிகமாக நடமாட ஆரம்பித்து விட்டார்களே!


கலைஞர் பதில்: சாமியார்கள் என்றாலே போலிதான். இதில் என்ன அசல் சாமியார்? போலிச்சாமியார்?


* 'விழா' முதல்வர்


தமிழ்நாடு மின்வாரியப் பொன்விழா, நேரு உள்விளையாட்டரங்கத்தில் 2.7.2007ம் தேதி நடந்தது. மின்வாரியப் பொன்விழா பதக்கங்களை வழங்கி முதல்வர் கலைஞர் அவர்கள் பேருரை ஆற்றியபோது:


''நான் ஐந்துமுறை முதலமைச்சர் பொறுப்பை ஏற்றாலும், பொறுப்பேற்ற ஒவ்வொரு முறையும் எப்படியாவது ஒரு விழா நடந்துள்ளன. அது வெள்ளி விழாவோ, அல்லது பொன் விழாவோ வந்து விடுகின்றன. எனவே, நான் 'விழா' முதல்வராகி விட்டேன். விழா முதல்வர் என்றால் 'விழா(த)' முதல்வராகவே ஆகிவிட்டேன். 


(உழைக்கும் வர்க்கம் நிரம்பிய அந்த அரங்கம், ஆரவாரத்தால் அதிர்ந்து போனது).

* பாண்டவர் லிப்ட்!


கலைஞர் முதல்வராக இருந்தபோது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்றார். அந்த நிகழ்ச்சி பலமாடிக் கட்டடம் ஒன்றில் நடப்பதாக இருந்தது. லிப்டில்தான் செல்ல வேண்டும். கலைஞரோடு முக்கிய பிரமுகர்களும் லிப்டில் நுழைந்தனர். 


இப்போது அந்த லிப்ட் பயணிக்கத் தொடங்கியவுடன் கலைஞர், ''ஓ... இது பாண்டவர் லிப்டா..?'' எனக் கேட்டார். உடன் நின்றவர்கள் ஒன்றுமே புரியாமல் தவித்து நின்றனர். சிறிது மவுனத்திற்குப் பிறகு, லிப்டின் உள்பகுதியின் மேலே எழுதப்பட்ட அறிவிப்பைக் கலைஞர் சுட்டிக்காட்டினார். அங்கு ''ஐவர் மட்டுமே'' என்ற வாசகம் காணப்பட்டது. பாண்டவர் ரதம் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது பாண்டவர் லிப்டையும் பார்த்துவிட்டோம் என்ற நினைப்பில், உடன் வந்தவர்கள் புன்சிரிப்பை உதிர்க்க கலைஞரும் அவர்களோடு சேர்ந்து கொண்டார்.


* குரு முன்னரே இடம்பெயர்ந்து போய் விட்டாரே...!


தலைமைச் செயலகத்தில் 4.12.2008ம் தேதி, தமிழகத்தின் திருக்கோயில்களில் பலவற்றில் இருந்து வந்திருந்த அர்ச்சகர்கள் பலர் முதல்வர் கலைஞரைப் பார்த்துத் தங்கள் கோரிக்கைகளை தெளிவுபடுத்தி நல்வாழ்த்துகளை அளித்த பின்னர், ''இன்னும் இரண்டு நாளில் குருப்பெயர்ச்சி இருப்பதால், அதாவது குரு கிரகம் இடம் மாறுவதால், அய்யாவுக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும்,'' என்றனர்.


உடனே கலைஞர் புன்முறுவல் பூத்தவாறே, ''குரு இடம் பெயர்ந்து இரண்டு நாள்களாகி விட்டது,'' என்றார். 


திகைத்துப்போன அர்ச்சகர்கள், ''இல்லை அய்யா... வரும் ஆறாம் தேதிதான் குரு இடம் மாறுகிறார்,'' என்றனர். மீண்டும் கலைஞர் ''இல்லை இல்லை... இரண்டாம் தேதியே குரு இடம் மாறிவிட்டார்,'' என்றார்.


அங்கே குழுமியிருந்த அமைச்சர் பெருமக்களும், உயர் அலுவலர்களும் கலைஞரின் நொடிப் பொழுதிலான நகைச்சுவைத் துணுக்கைக் கேட்டு, ரொம்பவே வாய்விட்டுச் சிரித்தனர்.


ஆலயம் உண்டு, ஆண்வர் உண்டு, அர்ச்சனை உண்டு எனக் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் அர்ச்சகர்களுக்கு ஆண்டு கொண்டிருக்கும் செம்மொழிச் செல்வரின் சொற்சிலம்பத்தை ரசிக்கத்தான் முடியுமா? தெம்புதான் உண்டா? இப்போதும் திகைத்து நின்ற அவர்களிடம், ''காடுவெட்டி குரு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தகவலைச் சொன்ன பிறகுதான் புரிந்த நிலையில் வெகுவாகச் சிரித்து, பல்லாண்டு, பல கோடி நூறாண்டு வாழ கலைஞரை வாழ்த்திவிட்டு விடைபெற்றுச் சென்றனர்.

* இது நாலாந்தர அரசு!


சட்டப்பேரவையில் ஒருமுறை எம்எல்ஏ டாக்டர் ஹண்டே திமுக அரசைப் பற்றி விமர்சிக்கும்போது, ''இது மூன்றாந்தர சர்க்கார்'' என்றார்.


அதைக்கேட்டதும் ஆளுங்கட்சியினர் கோபத்தில் கிளர்ந்து எழுந்தனர். அனைவரையும் கைமயமர்த்திய கலைஞர், ''டாக்டர் இந்த அரசை மூன்றாந்தர அரசு என்றார். திருத்திக் கொள்ள வேண்டும். இது நாலாந்தர அரசு. புரியவில்லையா டாக்டர் அவர்களே? பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்ற நான்கு வர்ணங்களில் நான்காவது வகைப்பட்ட சூத்திரர்களின் அரசு இது,'' எனத் தெரிவித்தேன். 


அப்போது சபையில் சிரிப்பொலியால் ஏற்பட்ட ஆரவாரம் அடங்க வெகுநேரமாயிற்று. இப்படி எதிராளியை நாவன்மையால் திணறடிக்கும் திறமை கலைஞருக்கே உரித்தானது.


* அயம் சாரி...!:


கோவை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பிற்குப் பிறகு, தீவிரவாதிகள் என சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்ட சமயம்.


செய்தியாளர்களின் கூட்டத்தில் கலைஞர் கலந்து கொண்டபோது ஒருவர், ''சிறையில் உள்ள முஸ்லிம் தீவிரவாதிகள் சித்ரவதை செய்யப்படவில்லை எனக் கூறியிருந்தீர்கள். ஆனால், அல்&உம்மா இயக்கத்தைச் சேர்ந்த அன்சாரியோ, சித்ரவதை செய்யப்பட்டது உண்மைதான் எனச்சொல்லி இருக்கிறாரே'' எனக் கேள்வி எழுப்பினார்.


அதைக்கேட்ட கலைஞர், ''அப்படியா சொன்னார் அன்சாரி...? ஐ ஆம் சாரி!,'' என பதில் அளித்ததுதான் தாமதம், கூட்ட அறையெங்கும் ஆரவாரச் சத்தமும் சிரிப்பொலியும்தான்.


* தொடரும் நூல் உறவு:


கவிஞர் வைரமுத்து ஒருமுறை தன் பிறந்தநாளையொட்டி கலைஞரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுவதற்காகச் சென்றிருந்தார். உங்கள் நூல்களால்தான் நான் தமிழைக் கற்றேன் என்று கூறி மரியாதை நிமித்தமாக அவருக்கு பொன்னாடை போர்த்தினார். கலைஞரும் பதிலுக்கு வைரமுத்துவுக்கு பொன்னாடை போர்த்தினார். 


அப்போது வைரமுத்து போர்த்திய பொன்னாடையில் இருந்து பிரிந்த ஒரு நூல், கலைஞரின் சட்டைப் பொத்தான் ஒன்றில் சிக்கிக் கொண்டது. அப்போது கலைஞர், 


''பார்த்தீர்களா... உங்களுக்கும் எனக்கும் உள்ள 'நூல்' தொடர்பு அறுந்து போகவில்லை,'' என்றார். அந்தக் கணத்தில் வைரமுத்துவும் கொஞ்சம் அசந்துதான் போனார்.


* எல்லோருக்கும் அல்வா கொடுத்த வீரப்பன்:


கடந்த 2000ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், வீரப்பன் பிடியிலிருந்து ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டம். முதல்வர் கலைஞர், கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, இரண்டு மாநில உயர் அதிகாரிகளும் இருந்தனர். 


அரசுத் தூதராக வீரப்பனை பார்த்துவிட்டு வந்த அண்ணன் நக்கீரன் கோபால், ''அவன் சொன்ன விஷயங்களைப் பத்தி, அவங்ககிட்டே எடுத்துச் சொன்னேன். அந்த சமயத்திலே, வீரப்பன் திடீர் திடீரென கோரிக்கைகளை அதிகரிச்சுக்கிட்டே இருந்தான். அதைக்கேட்டு கூட்டமே இறுக்கமாக ஆயிடுச்சு.


தேனீர் நேரத்துலயும் அந்த இறுக்கம் தளரலே. கிருஷ்ணாவுக்கு தரப்பட்ட முந்திரி கேரட் அல்வா இருந்த தட்டைக் காண்பித்து கலைஞர், 'இது வீரப்பன் கொடுத்த ''அல்வா'' என்றதும், அங்கிருந்தவங்க எல்லோரும், கலகலவெனச் சிரித்தனர். வீரப்பன் விவகாரத்தில் இறுக்கமா இருந்த எல்லோரையும் சகஜ நிலைக்குக் கொண்டு வந்த கலைஞரின் நகைச்சுவை உணர்வை கிருஷ்ணாவால் உடனடியாக பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


அதே நேரத்தில், ''இதைச் சிரிப்புக்காகத்தான் சொன்னேன்'' என கிருஷ்ணாவிடம் சொல்லவும் கலைஞர் மறக்கல.


(அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள் தெரிவித்த தகவல் இது).


எப்படிப்பட்ட இறுக்கமான சூழ்நிலையையும் தனது பேச்சுத்திறத்தால்... சுவையான, சமயோசிதமான நகைச்சுவைத் துணுக்குகளால் தளர்த்தி விடக்கூடிய வல்லமை, அரசியல் உலகில் கலைஞர் ஒருவரைத் தவிர வேறு எவருக்குமே கிடையாது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

நண்பருக்காக 65 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் காட்டிய கோபம்... அதிர்ந்த காமராஜர்!

Published on 02/06/2022 | Edited on 03/06/2022

 

ர

 

எழுத்தாளர், பேச்சாளர், படைப்பாளி, வசனகர்த்தா, பாடலாசிரியர், அரசியல் கட்சி தலைவர் என்று பல முகத்தினை உடைய திமுக  தலைவர் கலைஞருக்கு இன்று பிறந்தநாள். கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகம் அவரின் குரலைக் கேட்கவில்லை. அவரின் திரை வசனத்தை முகரவில்லை, இன்னும் சொல்லப்போனால் அவரின் கரகர குரலில் தொண்டர்களின் மூச்சோடு கலந்துள்ள 'உடன்பிறப்புகளே' என்ற வார்த்தையைக் கூடக் கேட்க முடியவில்லை. ஆனாலும், அவரின் திட்டங்களால், தத்துவங்களால் அவர் வாழ்ந்துகொண்டே இருக்கிறார் அனுதினமும்.

 

தோல்வியைத் தூர எறிந்தவன்

 

1957ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கு முதன் முதலாக குளித்தலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றார் அவர். அப்பொழுது அவருக்கு வயது 33. அவர் இறக்கும்போது அவருக்கு வயது 95. அப்பொழுது அவர் திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். கிட்டதட்ட 62 ஆண்டுகளாக அவர் சட்டப்பேரவை உறுப்பினர். தோல்வியே சந்திக்காத பேரவை உறுப்பினர் ஒருவர் 60 ஆண்டுகாலமாக இந்தியாவில் இருந்தார் என்றால், அவர் இவர் ஒருவர் மட்டுமே.

 

தமிழகத்தின் பொற்கால ஆட்சியைக் கொடுத்த காமராஜர் 1967 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளார். தமிழ்த்தாயின் தலைமகன் என்று சொல்லப்படும் பேரறிஞர் அண்ணா அவர்களும் 1962 ஆண்டு காஞ்சிபுரத்தில் தோல்வி அடைந்தார். ஜெயலலிதாவும் 1996ஆம் ஆண்டு பர்கூரில் தோல்வி அடைந்துள்ளார். ஆனால் கடந்த 60 ஆண்டுகாலமாகத் தேர்தலில் பங்கெடுத்த கலைஞர், தோல்வி அடைந்ததில்லை. அவர் தலைமையிலான திமுக படுதோல்வி அடைந்த 1991ஆம் ஆண்டு தேர்தலிலேயே கூட அவர் துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்றார்.

 

நகைச்சுவையின் நாயகன்

 

கலைஞரின் நகைச்சுவை என்பது அவருக்கு மட்டுமே வாய்த்த ஒன்று. ஒருமுறை சட்டமன்றத்தில் ஒரு காரசார விவாதம் நடைபெற்று வந்தது. ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர், "கும்பகோணம் கோயில் குளத்தில் முதலை உள்ளதாகக் கூறப்படுகின்றது. அவ்வாறு ஏன் செய்தீர்கள்? அதனை எப்படி ஏற்றுக்கொள்வது?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை வைத்தார். உடனடியாக கலைஞர் எழுந்தார். அவர் முதல்வராக இருந்த சமயம் அது. மாண்புமிகு உறுப்பினர் முதலையை ஏன் போட்டீர்கள் என்று கேட்கின்றார். அவருக்கு நான் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். அரசாங்கம் முதலைத்தான் போடமுடியுமே தவிர முதலையைப் போட முடியாது என்று கூறினார். கேள்வி கேட்ட எதிர்க்கட்சி உறுப்பினரும் அவரின் பதிலைக் கேட்டு அவர் சிரித்து விட்டார்.

 

ஒருமுறை கலைஞர் 'இந்து' என்றால் திருடன் என்று ஒரு அகராதியில் கூறப்பட்டுள்ளதாக பொதுக்கூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. சங்பரிவார் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன. தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்களும் நடந்தன. அப்பொழுது வட மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் கலைஞரின் தலையைச் சீவி விடுவேன் என்று கூறினார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் "உங்களின் தலையைச் சீவி விடுவதாக சாமியார் ஒருவர் கூறியுள்ளாரே அது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?" என்று கேட்டனர். அதற்கு யாரும் எதிர்பாராத ஒரு பதில் கலைஞரிடம் இருந்து உடனடியாக வந்தது, "நானே என் தலையைச் சீவி 20 வருடங்களுக்கு மேல் ஆகின்றது. அவருக்குதான் ஒரு வாய்ப்பை வழங்கிப் பார்ப்போமே" என்று. இதைவிட ஒரு சுவாரசிய சம்பவம் நடிகர் விஜய் படத்தின் வெற்றி விழாவில் நடைபெற்றது. 'லவ் டுடே' படத்தின் வெற்றி விழாவில் பங்கெடுத்த அவர், வெற்றி விழாவில் பேசும் போது, "தம்பி விஜய்க்கு லவ் டுடே, எனக்கு லவ் எஸ்டர் டே" என்று கூறினார். அவரின் இந்தப் பேச்சைக் கேட்ட விஜய் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்த சம்பவங்களும் நிறைய நடந்துள்ளது.

 

 

அடுக்கு மொழியின் காதலன்

 

கலைஞரை முதல்வர் நாற்காலியில் அமர வைத்ததில் ஒரு கவிதைக்கு முக்கிய பங்கு உண்டு. அண்ணா அவர்கள் மறைவையொட்டி அவர் எழுதிய அந்த கவிதைதான் அது.

 

மூன்றெழுத்திலே ஒரு சிறப்புண்டு-அதில்

முத்தமிழ் மணமுண்டு

மூவேந்தர்,முக்கொடி,முக்கனி-என

மும்முரசு ஆர்த்தவர் தமிழர்

அவர் வாழ்ந்த -தமிழ்

வாழ்வுக்கு மூன்றெழுத்து-அந்த

வாழ்வுக்கு அடிப்படையாம்

அன்புக்கு மூன்றெழுத்து-அந்த

அன்புக்கு துணைநிற்கும்

அறிவுக்கு மூன்றெழுத்து

அறிவார்ந்தோர் இடையில்எழும்

காதலுக்கு மூன்றெழுத்து

காதலர்கள் போற்றி நின்ற கடும்

வீரமோ மூன்றெழுத்து

வீரம் விளைக்கின்ற களம் மூன்றெழுத்து

களம் சென்று காண்கின்ற

வெற்றிக்கு மூன்றெழுத்து-வெற்றிக்கு

ஊக்குவின்ற அமைதிமிகு

அண்ணா மூன்றெழுத்து என்று அந்த கவிதை முடியும்.

 

அதில், ஒருவரியில் "நீ கண்மூடி சிந்திக்கும் பேரழகைப் பார்த்துள்ளேன், இன்று மண்மூடிக் கொண்டு உன்னைப் பார்க்காமல் தடுப்பதென்ன கொடுமை" என்று எழுதியிருப்பார் அவர். தமிழ் சிலருக்கு வசமாகலாம். ஆனால் தமிழ், வாழ்க்கை ஆனது கலைஞருக்கு மட்டுமே.

 

தமிழகத்தின் முதல்வராக கலைஞர்

 

தமிழைத் தவிர எந்த பின்புலமும் இல்லாத அவர் தமிழகத்தின் முதல்வராக 19 ஆண்டுகாலம் இருந்துள்ளார். அதாவது தமிழகத்தின் நீண்டகால முதல்வர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இது ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தில் நடந்தது அல்ல, அல்லது கூவத்தூர் பாணியில் வந்ததும் அல்ல. சோம்பலுக்கு விடுமுறை தந்துவிட்டு, சூரியனுக்கு முன் துயிலெழுந்த அவரது உழைப்பால் கிடைத்ததன்றே தவறி, வேறொன்றும் அல்ல. 45 வயதிலேயே தமிழகத்தின் முதல்வர் நாற்காலியை அலங்கரித்தவர். 80 வயதுக்கும் மேலாக முதல்வர் பதவியில் இருந்தவர். 1971ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் 184 உறுப்பினர்களோடு மிகப்  பெரிய மெஜாரிட்டியில் பதவிக்கு வந்தவர். 20 ஆண்டுகள் கழித்து தான் ஒருவன் மட்டுமே வெற்றி பெற்ற போதும் தோல்வியில் கலங்காதவர். வெற்றியையும், தோல்வியையும் பெரிய வித்தியாசத்தோடு பார்க்காத பண்பாளன் என்றால் அது மிகையல்ல.பல சாதிகளாகப் பிரிந்திருந்த தமிழனைச் சமத்துவபுரத்தில் சமமாக ஆக்கியவர். சாதி மறுப்பு திருமணத்துக்காக கடைசி வரையில் போராடி வெற்றி பெற்றவர். பெண் குழந்தைகளுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கிய தாய் உள்ளம் கொண்டவர். இன்னும்  சொல்லலாம். 

 

தலைவர்களின் பார்வையில் கலைஞர்

 

கலைஞர் கருணாநிதி, இந்த ஒற்றை பெயர்தான் கடந்த 60 ஆண்டுகாலத் தமிழ் பத்திரிகை உலகின் தலைப்பு செய்தி என்று ஒருமுறை கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்திருப்பார். அது வெறும் வாய் சொல்லல்ல. 1996 ஆண்டு தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், பிரதமர் பதவிக்கு யாரைக் கொண்டு வரலாம் என்ற பேச்சு வட மாநில தலைவர்கள் மத்தியில் எழுந்தது. உடனே அவர்கள் அனைவரும் சொன்ன ஒரு பெயர் கலைஞருடையது. ஆனால் விஷயத்தை கேள்விப்பட்ட அவர் 'என் உயரம் எனக்குத் தெரியும்' என்று கூறி அந்த வாய்ப்பை நிராகரித்தார். அதன் பிறகே கர்நாடகாவைச் சேர்ந்த தேவகவுடா பிரதமர் ஆனார் என்பது வரலாறு. ஒருமுறை ஜெயலலிதாவிடம் 'கலைஞரிடம் பிடித்தது எது?' என்று பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த அவர், அவரின் தமிழ் என்றும், கூடுதலாக அவரின் குடும்பப் பாசமும் கூட என்று கூறி ஒரே கேள்வியில் ரோஜா பூவையும் , அணுகுண்டையையும் சேர்ந்து வீசினார் ஜெயலலிதா. இந்த பதில் கூட கருணாநிதியின் வசனத்தின் தாக்கத்தால் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டிருக்குமோ என்று கூட அப்பொழுது பத்திரிகைகள் எழுதின.

 

 

அணுகுண்டை விடவும் ஆபத்தானது கலைஞரின் கோபம்

 

கலைஞரை அனைவரும் சிரித்துப் பார்த்திருப்போம், சிலர் அழுதும் பார்த்திருப்போம். ஆனால் பெரும்பாலானோர் அவர் கோபப்பட்டுப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அப்படியும் ஒரு சம்பவம் 1957 ஆம் ஆண்டு நடந்தது. அப்பொழுது கர்ம வீரர் காமராஜர் முதல்வராக இருந்த சமயம். நிதி அமைச்சராக சி.சுப்ரமணியன் இருந்தார். சட்டப்பேரவையில் நடந்த ஒரு விவாதத்தில், தன்னுடைய கருத்தைத் தெரிவிக்கும் விதத்தில், இளம் பெரியார் என்று அழைக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆசைத்தம்பி, தன்னுடைய கையை உயர்த்தி சபாநாயகரின் கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளார். பல முறை முயன்றும் அவரை சபாநாயகர் கவனத்தில் கொள்ளவில்லை. அவையில் ஒரு பகுதியில் இருந்து இதனை கலைஞர் கவனித்து வந்தார். அப்பொழுது திடீரென எழுந்த அமைச்சர் சி.சுப்ரமணியன், ஆசைத்தம்பியிடம் உங்களுக்குச் சிறுநீர் வந்தால் தாரளமாக வெளியே செல்லாம், அதற்காகச் சபாநாயகரிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்று கூறி அமர்ந்தார்.

 

அமைச்சரின் இந்த பதிலைக் கேட்ட ஆசைத்தம்பி செய்வதறியாது திகைத்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார். அப்பொழுதுதான் அந்த குரல் வெளிப்பட்டது, வெளிப்படுத்தியவர் கலைஞர். அமைச்சரின் பேச்சால் கடும் கோபத்துக்கு உள்ளான அவர், சபாநாயகரைப் பார்த்துக் கூறியதுதான் உச்சகட்ட அணுகுண்டு தாக்குதல். "மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே, ஆசைத்தம்பிக்கு சிறுநீர் வந்தால், அமைச்சர் சி.சுப்பரமணியன் ஏன் வாய் திறக்கின்றார்" என்று கூறி தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார் கலைஞர். அவரின் இடிமுழக்கக்  கருத்தைக் கேட்ட சி.சுப்ரமணியன் அவமானத்தால் கூனிக்குறுகினார். கலைஞரின் பேச்சைக் கேட்ட காமராஜர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

 

 

 

Next Story

கலைஞர் வந்தா கலகலப்புதான்.. கலைஞரின் ஹைலைட் பிரஸ்மீட்கள்! #1  

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

kalaignar smile


இன்றிருக்கும் எந்த ஒரு அரசியல் தலைவரைவிடவும் செய்தியாளர்களிடம் மிகுந்த நெருக்கமும், அவர்களுக்கு முக்கியத்துவமும் கொடுத்தவர் கலைஞர். காலை நான்கு மணியிலிருந்து கிட்டத்தட்ட அனைத்து பத்திரிகைகளையும் படித்துவிட்டு ஆறு மணிக்கு அதில் பலரை போனில் அழைத்து கருத்துகளை சொல்வார். தன்னை விமர்சித்து வரும் செய்திகளுக்கும்கூட விளக்கம் கொடுப்பார். ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் பத்திரிகையாளர்களுடன் அவர் பராமரித்த உறவு பாராட்டத்தக்கது என்கின்றனர் எதிர்தரப்பு பத்திரிகையாளர்களும். அதிலும் அவரது செய்தியாளர்கள் சந்திப்பு களைகட்டும். அவரை மடக்க வேண்டும் என்று வரும் கேள்விகளை மடக்கி திருப்பி அனுப்பும் திறனே தனி.
 


பெரியாரும்-பெரியாறும்

கலைஞருக்கு மதுரைப் பல்கலைக்கழகம், 'முனைவர்' பட்டம் வழங்கிச் சிறப்பித்த அன்று,(16-12-2006) மதுரையில் நிருபர்கள் அவரைப் பேட்டி கண்டனர். அப்போது பெரியாறு அணை குறித்து நிருபர் ஒருவர் கேட்டபோது, கலைஞர் அவர்கள், "பெரியாரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, 'பெரியாறு' பற்றி கேட்கிறீர்கள். 'முல்லைப் பெரியாறு' என்று கேளுங்கள் என்றார். (நிருபர்கள் கூட்டத்தில் சிரிப்பொலி). மீண்டும் ஒருவர் பேட்டியின் இறுதியில், சசிகலா கணவர் நடராசன் வழக்கு ஒன்றிற்காக, உங்களை ரகசியமாகச் சந்தித்ததாகக் கூறப்படுகிறதே எனக் கேட்டபோது, "நீண்ட நேரம் பேட்டி கொடுத்தால், இப்படித்தான் கேள்வி கேட்பீர்களோ" என்று பலத்த சிரிப்புடன் பதில் அளித்தார். நிருபர்களும் சிரிப்பில் கலந்தனர்.

அடுத்த கட்ட நடவடிக்கை

1997-ம் வருடம் சந்தனகடத்தல் வீரப்பனால் 9 வனத்துறை ஊழியர்கள் கடத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக அவர்களை மீட்க நக்கீரன் ஆசிரியர் அரசு தூதராக நியமிக்கப்பட்டு வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கும்போது 21-7-1997 அன்று தமிழக முதல்வர் கலைஞரும், கர்நாடக முதல்வர் ஜே.ஹெச்.பட்டேலும் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, நக்கீரன் ஆசிரியரிடமிருந்து வந்த மீட்பு முயற்சி பற்றிய தகவல்களைக் கூறிக் கொண்டிருந்தனர். அதில் நிருபர்கள், பிரச்சனையை வலுவாக்கும் விதமாக கேள்விகள் கேட்க ஆரம்பித்தவுடன், பேட்டியை முடிவுக்குக் கொண்டுவர நினைத்த கலைஞர் எந்தவித கோபமும் இன்றி சமயம் பார்த்துக் கொண்டிருந்த நேரம், ஒரு நிருபர், 'உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?' என்று கேட்க, உடனடியாக கலைஞர் "அடுத்த கட்ட நடவடிக்கை எல்லோரும் சாப்பிட செல்லவேண்டியதுதான்" என்று கூறினார்.(மதிய உணவை மறந்து, நிருபர்கள் சிரித்து கலகலப்பாகினர்).
 

 

 

 


'சின்ன'ப் பிரச்சினை இல்லவே இல்லை

உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பாக, கூட்டணிக் கட்சித் தலைவர்களிடையேயான பங்கீடு பற்றி பேச்சுவார்த்தைகள் அறிவாலயத்தில்      நடந்தபின், நிருபர்கள் கலைஞரைப் பேட்டி கண்டனர்.

ஒருவர்: இந்தத் தேர்தலில், முக்கிய பிரச்சினையாக எது இருக்குமென்று நீங்கள் கருதுகிறீர்கள்?

கலைஞர் (சிரித்துக் கொண்டே): வெற்றி தோல்விதான் (சிரிப்பு).

மற்றவர்: உங்கள் கட்சிகளுக்கிடையே இடப்பங்கீட்டில் சின்ன பிரச்சனைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

கலைஞர்: "சின்ன பிரச்சனையும் இல்லை. சின்னங்களிலும் பிரச்சனை இல்லை.
(மிகவும் பரபரப்பான சூழ்நிலைகளிலும், கலைஞரின் இயல்பான நகைச்சுவையுணர்வைக் கண்டு நிருபர்கள் வியந்து சிரித்து மகிழ்ந்தனர்).

பூரண மதுவிலக்கு வந்தால் சரி!
 

http://onelink.to/nknapp


நவம்பர் 98-ல் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது,

ஒரு நிருபரின் கேள்வி...

"பார் வைத்துக் கொள்ள அனுமதி கொடுக்காவிட்டால் மதுபானக் கடைகளை மூடிவிடப் போவதாக மதுக்கடை உரிமையாளர்கள் அறிவித்திருக்கிறார்களே...?

கலைஞரின் பதில்: நல்லதுதானே. அவர்கள் கடைகளை மூடிவிட்டால் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு தானாகவே வந்துவிடும்தானே...
(நிருபர்கள் சிரிப்பில் மூழ்கினராம்)