இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓபிஎஸ் 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்று தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் துறை வாரியாகவும், அரசின் திட்டங்களுக்காகவும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்று அறிவித்து இருக்கிறார்கள். தமிழக அரசின் வருமானத்தை விட செலவு அதிகமுள்ள பற்றாக்குறை பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்து தமிழக அரசின் கடன் சுமையை அதிகரிப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல. நிதி வருவாயை அதிகரிப்பதற்கும், நிதி பற்றாக்குறையை போக்குவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகின்ற காலங்களில் மக்கள் நலன் திட்டங்களுக்கு நிதியே இருக்காது. கடன் வாங்கி கொண்டே செல்வதை தவிர்த்து வேறுவழியில்லை. இன்னும் சில வருடங்களில் தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று போராடும் நிலை உருவாகும். அவினாசி – அத்திக்கடவு திட்டத்திற்கு நிதி ஒதுக்கியிருப்பதை வரவேற்கிறோம்.