சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவின் சார்பாக இதுவரை ஒட்டுமொத்தமாக 3 பதக்கங்கள் வெல்லப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில் அதிக எடை காரணமாகப் பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்த போட்டியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
போட்டிக்கு முன்னதாக இரவு முழுவதும் உடல் எடையைக் குறைக்க வினேஷ் போகத் தீவிர பயிற்சி மேற்கொண்டார். இதன் காரணமாக அவரின் உடல் ஏற்பட்ட நீர்ச்சத்து குறைபாடு காரணமாக வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் பயிற்சியால் ஒரே இரவில் 1.85 கிலோ உடல் எடையை வினேஷ் போகத் குறைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க கனவில் ஏற்பட்ட சிறிய சரிவாக இது பார்க்கப்பட்டாலும் இறுதிவரை போராடிய வினேஷ் போகத் தீவிர முயற்சிக்குபலரும் பாராட்டையும், ஆறுதலையும் சொல்லி வருகின்றனர். பிரதமர் மோடியும் வினேஷ் போகத்திற்கு சமூக வலைத்தளம் மூலமாக ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 'வினேஷ், நீங்கள் ஒவ்வொரு வகையிலும்உண்மையான சாம்பியன். உங்கள் வலிமை மற்றும் இறுதிப் போட்டிக்கான பயணம் மில்லியன் கணக்கான இந்திய மகள்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. இந்த தகுதியிழப்பால் உங்கள் மனதையும் சாதனைகளையும் குறைக்க முடியாது. நீங்கள் ஒரு பதக்கத்தைத் தவறவிட்டாலும், உங்கள் அபாரமான உறுதியால் அனைவரின் மனதையும் வென்றுள்ளீர்கள்' என தெரிவித்துள்ளார்.