
அண்மையில் தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அமைச்சர் பொன்முடியிடம் இருந்த உயர்கல்வித்துறை மாற்றப்பட்டு அவருக்கு வனத்துறை கொடுக்கப்பட்டது. அதேபோல் அமைச்சர்களின் பல்வேறு துறைகள் மாற்றப்பட்டதோடு புதிதாக அமைச்சர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறைக்கு கோவி.செழியன் நியமிக்கப்பட்டு இருந்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதல்வராகவும் அறிவிக்கப்பட்டிருந்தார். முன்னதாக அமைச்சர் பொன்முடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் மோதல் போக்கு இருந்தது வந்தது. ஆளுநர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாக்களை பொன்முடி தவிர்த்து வந்தார்.
தொடர்ந்து 2026 ஆம் சட்டப்பேரவைத் தேர்தலை மையமாக கொண்டு அரசியல் கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. இந்நிலையில் 'எனக்கே கூட சீட்டு இல்லாமல் போகலாம்' என திமுக நிகழ்ச்சியில் பொன்முடி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரத்தில் நிகழ்ந்த கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, ''நீங்கள் என்ன வேலை செய்கிறீர்களோ அதை பொறுத்துதான் இங்கே இருப்பீர்கள். யாராக இருந்தாலும் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் எனக்கே கூட சீட்டு இல்லாமல் போகலாம். யார் நிறுத்தப்பட்டாலும் தலைவர் யாரை கழகத்தினுடைய வேட்பாளராக நியமிக்கிறாரோ அவர்தான் நம்முடைய கண் முன் தெரிய வேண்டுமே. தவிரவேறு ஒன்று இருக்கக் கூடாது'' என பேசினார்.