Skip to main content

தெப்பத்தை சீரமைக்க கோரிக்கை..!!

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய தெப்பக்குளங்களில் ஒன்று எட்டயபுரம் கிருஷ்ணன் கோவில் நல்ல தண்ணீர் தெப்பக்குளம். கடந்த பல ஆண்டுகளாக வறண்டு போய் காட்சியளித்த தெப்பக்குளத்தில் தற்போது பெய்துவரும் தொடர் மழையால் நீர் நிரம்பி வருவது எட்டயபுரம் மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. 
 

ettyapuram issue


இது 204.8 மீட்டர் நீளம் அகலம் உடையது. சதுர வடிவிலான குளத்தின் நான்கு புறமும் 12 அடி உயரமுள்ள படிக்கட்டுகளும் குளத்தின் தரையிலிருந்து 15 அடி உயரம் கொண்ட கற்களால் ஆன சுவர்களும் எழுப்பப்பட்டுள்ளன. பிதப்புரம் பாண்டியன் கண்மாய், சிவசங்கரன் பிள்ளை கண்மாய், அட்டை குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீர்வழித்தடங்கள் அமைக்கப்பட்டு 200 ஆண்டுகளுக்கு முன்பு எட்டயபுரம் சமஸ்தானம் மகாராஜா காலத்தில் கட்டப்பட்டுள்ளது. தெப்பக்குளத்தின் மையப்பகுதியில் நாழி கிணறு உள்ளது. 

தெப்பக்குளத்தின் மேற்கு படித்துறை பகுதியில் கிருஷ்ணர் கோவிலும், கல் மண்டபமும் உள்ளது. நீண்ட நெடுங்காலமாக எட்டயபுரம் மக்களின் குடிதண்ணீர் ஆதாரமாக இந்த தெப்பக்குளம் இருந்துள்ளது. ஆகவே 24மணி நேர பாதுகாவலர்கள் கண்காணிப்பில் மன்னர்கள் காலத்தில் முழு சுகாதாரத்தோடு திகழ்ந்திருக்கிறது. காலப்போக்கில் அரசு நிர்வாகத்தின் கீழ் சமஸ்தானங்கள் இணைக்கப்பட்ட போது தெப்பக்குளமும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதன்பிறகு பராமரிப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாததாலும், நீர்வரத்து பாதைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளானதாலும் தெப்பக்குளம் வறண்டு போய் புதர் மண்டி காட்சிப்பொருளாக மாறிப்போனது.

தற்போது தமிழக அரசு செயல்படுத்திவரும் குடிமராமத்து பணிகள் மற்றம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் ஊருக்கு நூறு கை திட்டங்களின் மூலம் எட்டயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் குடிமராமத்து பணிகள், நீர்வரத்து பாதைகள் தூர்வாரப்பட்டதன் விளைவாக எட்டயபுரம் கிருஷ்ணன் கோவில் தெப்பக்குளத்திற்கு மழைநீர் வரத்து தொடங்கியுள்ளது. கடந்த 10 நாள்களாக எட்டயபுரம் பகுதியில் பெய்துவரும்  தொடர் மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து தெப்பக்குளம் நிரம்பி வருகிறது. இதனை கண்டு எட்டயபுரம் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சுமார் 25 அடி ஆழமுள்ள இந்த தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பினால் வானம் பார்த்த பூமியான எட்டயபுரம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும் என்கின்றனர் விவசாயிகள். 


அதே வேளையில், சுகாதார சீர்கேடுகளுடன் சுற்றுச்சுவர்களில் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கும் தெப்பத்தை பேரூராட்சி நிர்வாகம் சீரமைத்து பராமரிக்க வேண்டுமென எட்டயபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.