Skip to main content

எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளுக்கு பச்சை துரோகம் இழைக்க கூடாது- பி.ஆர்.பாண்டியன் 

Published on 29/04/2018 | Edited on 29/04/2018
puthu

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் இரு சக்கர வாகன பிரச்சாரம் நடந்தது. இதில் விவசாயிகள்  மீது கார் மோதி விபத்து. இதனை தொடந்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர்  சரியான பாதுகாப்பு வழங்கவில்லை என்று  தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

 

    தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் 50 க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகன பிரச்சாரம் கடந்த 25ம் தேதி நாகை மாவட்டம் வேதாரண்யத்தில்  துவங்கி 13 மாவட்டங்கள் வழியாக வந்து ஞாயிறு காலை புதுச்சேரி வழியாக கடலூர் மாவட்டத்திற்கு  வந்தது. சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம் கிராமத்தில்  பிரச்சார பயணத்தினர் சென்ற போது எதிரே வந்த கார் விவசாயிகள் மீது  மோதியது.  இதில் விவசாயி தர்மராஜ் இரு சக்கர வாகனம் மீது மோதி பலத்த காயமடைந்தார்.

 

இதனால் ஆத்திரமடைந்த பி.ஆர். பாண்டியன் தலைமையிலான விவசாய குழுவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டனர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கடலூர் - சிதம்பரம் சாலையில்  அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த கடலூர் எஸ்பி விஜயகுமார் விவசாயிகளை சமாதானப்படுத்தியதை தொடர்ந்து பிரச்சார பயணம் சிதம்பரம் நோக்கி சென்றனர். பின்னர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 

காவிரி வறண்டு, விவசாய நிலங்களெல்லாம் காய்ந்து மக்கள் குடி தண்ணீருக்கு காலி குடங்களுடன் தெருவில் அலைகின்றனர். மத்தியில் ஆளுகின்ற மோடி அரசு 5 கோடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தவறிவிட்டது.  தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழக அரசு அந்த வழக்குகளில் தவறிழைக்காமல் வாதாடி காவிரியில் முதல்வராக இருந்த ஜெயலலிதா பெற்று தந்த உரிமையை பெற்று தர வேண்டும். பச்சை துண்டிற்கு முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி துரோகம் இழைக்க கூடாது. காவிரி பிரச்சனையில் திமுக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியது. அதே போல் மே 3 ம் தேதி தமிழ் நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களையும் தடுத்து நிறுத்தி மத்திய அரசிற்கு அழுத்தம் தர வேண்டும். இதில் திமுக தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்றார்.

 

மேலும் தொடர்ந்து பேசிய பி.ஆர். பாண்டியன்,  நாங்கள் கடந்த 25ம் தேதியில் இருந்து இன்று வரை 13 மாவட்டங்களை கடந்து கடலூர் மாவட்டத்திற்கு வந்தோம். மாவட்ட எல்லையில் இருந்து போலீஸார் சரியான பாதுகாப்பு வழங்கவில்லை. இருந்தும் எங்கள் பிரச்சார பயணம் தொடர்ந்து நடந்தது. புதுச்சத்திரத்தில் வந்த போது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் எங்களது திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் தர்மராஜ் காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.