Skip to main content

மாணவர்கள் வயிற்றில் அடிக்கும் மத்திய, மாநில அரசுகள்...!-கொ.ம.தே.க.ஈஸ்வரன் கண்டனம்! 

Published on 26/10/2020 | Edited on 26/10/2020
ESWARAN

 

"இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு மறுப்புக்கு உச்சநீதிமன்றம் காரணமல்ல. மத்திய, மாநில அரசுகள் தான் காரணம்." என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் E.R.ஈஸ்வரன் கூறியுள்ளார்.இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 50 சதவீத இட ஒதுக்கீட்டை மறுத்து தீர்ப்பளித்து இருப்பது பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்று மத்திய, மாநில அரசுகள் வேஷம் போடலாம். ஆனால் மத்திய அரசு 50 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் வாதங்களை வைத்து இருக்கிறது. உச்சநீதிமன்றம் நம்பி எதிர் தீர்ப்பளிக்கும் அளவிற்கு பொய்யான ஆதாரங்களை அளித்திருக்கிறது. மாநில அரசு 50 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான முனைப்பை தனது வாதத்தில் காட்டாமல் போனதும் இதற்கு காரணம். மத்திய, மாநில அரசுகள் ஒன்று சேர்ந்து இந்த இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இருக்கும் போது மற்ற கட்சிகளுடைய வாதங்கள் எடுபட வாய்ப்பில்லை. மாணவர்களுடைய வயிற்றில் இந்த ஆண்டு அடித்த மத்திய அரசையும், அதற்கு துணை போன மாநில அரசையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

மருத்துவ கல்வி இட ஒதுக்கீடு விஷயத்தில் மத்திய அரசு நமக்கு எதிராக இருக்கிறது. மாநில ஆளுநரும் எதிராக இருக்கிறார். இதுவெல்லாம் மாநிலத்தில் ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கு உரிய மரியாதை மத்திய பாஜக தலைவர்களிடத்தில் இல்லை என்பதுதான் காரணம். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ஆளுநருடைய முடிவு வராமல் கலந்தாய்வு நடத்த மாட்டோம் என்று அறிவித்தது போல 50 சதவீத இட ஒதுக்கீட்டில் மத்திய அரசை பணிய வைக்க தமிழக அரசு கடுமையான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மொத்தத்தில் நீட் தேர்வு ஆரம்பித்த காலத்தில் இருந்தே ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ மாணவர்கள் கல்லூரி சேர்க்கை முடியும்வரை ஒருவிதமான குழப்பத்திலேயே வைக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டும் ஒரு முடிவு இல்லாமல் இது தொடர்ந்து கொண்டே இருப்பதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் உள்ள மாநில அரசின் அதிவேக நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றோம்." என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘உங்க ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?’-வறுத்தெடுத்த உச்சநீதிமன்றம்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
What is your governor doing?- The Supreme Court asked

பொன்முடி வழக்கில் தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. இதன் காரணமாக மீண்டும் பொன்முடி அமைச்சர் பதவி ஏற்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் பொன்முடி பதவி ஏற்பதாக இருந்த 14 ஆம் தேதி ஆளுநர் திடீரென டெல்லி புறப்பட்டார்.

இதனால் பதவியேற்பு காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 17 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பொன்முடி அமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுத்ததால், அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், ‘அரசியல் சாசனத்தில் 164(1) பிரிவை ஆளுநர் ஆர்.என். ரவி அப்பட்டமாக மீறுகிறார். தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ஆர்.என். ரவி முயற்சிக்கிறார். எனவே, பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

What is your governor doing?- The Supreme Court asked

ஆளுநருக்கு எதிரான இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ‘பொன்முடியை அமைச்சராக்க முடியாது என ஆளுநர் கூறுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பத்து மசோதாக்களை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை’ உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதங்களாக வைத்தது.

அதனைத் தொடர்ந்து, 'தான் என்ன செய்கிறோம் என்று ஆளுநருக்கு தெரியாதா?' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக தெரிவித்ததோடு, தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பாகும். உச்சநீதிமன்றத்துடன் ஆளுநர் விளையாட வேண்டாம். ஆளுநருக்கு பதவியேற்பை நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை. ஆளுநர் மறுத்தால் நீதிமன்றம் உத்தரவிடும்' என காட்டமாக தெரிவித்தார்.

மேலும், ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்சநீதிமன்றம் தனது கண்டிப்பை தெரிவித்துள்ளது. 'உங்கள் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்' என்று ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞரிடமும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளதோடு, இந்த விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கெடு விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

Next Story

பொய் விளம்பரம்; மன்னிப்பு கேட்ட பதஞ்சலி

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
false advertising; Patanjali apologized

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், சர்ச்சைக்குரிய சாமியார் பாபா ராம்தேவால் நடத்தப்படுகிறது. முழுக்க முழுக்க சுதேசி பொருட்களுக்கான விற்பனை என்ற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனம், சிம் கார்டு மற்றும் கிம்போ எனும் குறுஞ்செய்தி செயலியையும் அறிமுகம் செய்து உணவு மற்றும் மருத்துவ பொருட்களை விற்று வருகிறது. இந்நிலையில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் பதஞ்சலி உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது.

உரிய அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இல்லாத நிலையில், பதஞ்சலி நிறுவனம் தனது தயாரிப்புகள் பல நோய்களைக் குணப்படுத்தும் என விளம்பரம் செய்யப்படுவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. அதேநேரம் அலோபதி மருத்துவம் குறித்து அடிக்கடி சர்ச்சையாகப் பேசி வரும் ராம்தேவ்க்கு கண்டங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கம் பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பொய் விளம்பரங்களைப் பரப்புவதற்கு பதஞ்சலி நிறுவனத்திற்கு நீதிமன்றம் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பதஞ்சலி மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் விளம்பரங்களில் மீண்டும் தவறான தகவல்களை வெளியிட மாட்டோம் என பதஞ்சலி நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஏப்ரல் இரண்டாம் தேதி பாபா ராம்தேவ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.