ஒருபுறம் அ.தி.மு.க. கூட்டணி மறுபுறம் தி.மு.க. கூட்டணி என சென்ற நாடாளுமன்ற தேர்தலிருந்து கூட்டணிகள் இரண்டிலும் உள்ள கட்சிகள் அப்படியே அரசியலில் பயணம் செய்து வருகிறது. அடுத்த ஆறு மாதத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணி அப்படியே தொடருமா அல்லது ஒவ்வொரு கூட்டணியிலும் உள்ள கட்சிகள் காட்சிகளை மாற்றுமா என்பது தேர்தல் நேரத்தில் தெரிய கூடும்.
இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கொங்கு நாடு தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் E.R.ஈஸ்வரன் தனது கட்சி நிர்வாகிகளுடன் 14ஆம் தேதி மதியம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த கிராமமான சிலுவம் பாளையம் தோட்டத்திற்கு சென்றார். முதல்வரின் தாயார் தவுசியம்மாள் 12ஆம் தேதி இரவு காலமானார். 13ஆம் தேதி காலை அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
தாயார் இறப்புக்காக அஞ்சலி செலுத்தவும், துக்கம் விசாரிப்பவர்களை சந்திக்கவும் தனது தோட்டத்து வீட்டில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. முதல்வரிடம் துக்கம் விசாரிக்க வந்த ஈஸ்வரன் அங்கிருந்த முதல்வர் எடப்பாடியை சந்தித்ததோடு முதல்வரின் மனைவி மற்றும் உறவினர்களுககும் வணக்கம் தெரிவித்து முதல்வர் தாயார் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பதினைந்து நிமிடங்கள் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் ஈஸ்வரன்.
அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதற்கும் வாழ்த்து கூறிய ஈஸ்வரன், தாயார் மறைவுக்கு துக்கம் விசாரிக்க நேரில் சென்று பேசிவிட்டு வந்ததும் கொங்கு மண்டல அரசியலில் பேசுபொருளாக உள்ளது.