Skip to main content

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கொடூர கொலை...! - ஈரோட்டில் பரபரப்பு

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

Erode woman passes away

 

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி 30 வயதான ரேகா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் ஒரு மகனும் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரேகாவின் பெற்றோர்கள் ஈரோடு ஏ.பி.டி. ரோடு பகுதியில் வசித்து வருகிறார்கள். 


இந்த நிலையில் நேற்று ரேகா தனது குழந்தைகளுடன் ஒரிரு நாட்களுக்கு முன்னர் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் ரேகாவின் தாயார் தமிழரசி மற்றும் தம்பி மணி ஆகியோர் இருந்துள்ளனர். இன்று (25.01.2021) காலை ரேகா உறவினர் ஒருவரது வீட்டு கிரஹப் பிரவேசத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இவரது தாயார் தமிழரசி, பேரன்களுடன் வெளியே சென்றுவிட்டார்.


வீட்டில் ரேகா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் ரேகாவின் வீடு எங்கு உள்ளது என அப்பகுதியினரிடம் கேட்டுள்ளார். அக்குடும்பத்திற்குத் தெரிந்தவர் தான் என நினைத்த அப்பகுதியினர் வீட்டை அடையாளம் காட்டியுள்ளனர். அந்த வீட்டுக்குச் சென்ற அந்த இளைஞர் சிறிது நேரத்தில் ரேகா வீட்டிலிருந்து ரத்தக்கறையுடன் வெளியேறியிருக்கிறார். அதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ரேகா வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அங்கு ரேகா அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தது தெரியவந்தது. 


இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து உடனடியாக ஈரோடு எஸ்.பி. தங்கதுரை, ஏ.டி.எஸ்.பி. பொன் கார்த்திக்குமார், டி.எஸ்.பி. ராஜு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. 


இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலையாளி வந்து சென்றது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதோடு கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பட்டப்பகலில் ஈரோட்டில் வீடு புகுந்து இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.